PUBLISHED ON : மே 17, 2026

கேரளாவில் அதிகமாக பயன்படுத்தும் பதிமுகம் நீர், உடலில் உ ள்ள கழிவுகளை இயற்கையான முறையில், வெளியேற்றும் தன்மை கொண்டது. இது செரிமானப் பிரச்னைகளை குறைக்கும். குடல், ரத்தம் சுத்தமாகும்.
தொடர்ச்சியாக குடித்தால், சருமம் பளபளப்பாவதோடு தோலின் நிறத்தை மேம்படுத்தும் தன்மையும் இதற்கு உண்டு.
'டீன் ஏஜில்' இருப்பவர்களுக்கு வரும் முகப்பருக்களை குறைக்கும்; கரும் புள்ளிகளையும் போக்கும்.
கேன்சரை உண்டாக்கக் கூடிய மோசமான அணு மூலக் கூறுகளை எதிர்த்து போராடும்.
பெருங்குடல், உணவுக் குழாயில் வரும் கேன்சர் அபாயத்தைக் குறைக்கும்.
உடல் எடையை சீராக வைக்கும்.
ரத்த சர்க்கரை, உயர் ரத்த அழுத்தத்தை பராமரிக்கும்.
இதனால் இதயம் ஆரோக்கியமாக செயல்படும்.
பதிமுகம் நீரில், 'பிரேசிலின்' என்ற வேதிப்பொருள் இயற்கையாகவே உள்ளது. இது தான், பதிமுக மரப்பட்டைக்கு சிவப்பு நிறத்தையும் கொடுக்கிறது. இதனால், வாய் துர்நாற்றத்தை குறைக்கும். பற்சிதைவைத் தடுத்து, பற்களை ஆரோக்கியமாக வைக்க உதவும்.
'ப்ரோட்டோசபனின் ஏ' என்ற மற்றொரு வேதிப்பொருளும் உள்ளது. இது மூளையை சுறுசுறுப்பாக செயல்பட வைப்பதால், பார்க்கின்சன்ஸ், அல்சைமர் போன்ற நோய்கள் எதிர்காலத்தில் வருவதைத் தடுக்கும்.
எப்படி தயார் செய்வது?
பதிமுகம் பொடி அல்லது மரப்பட்டை என்று நாட்டு மருந்துக் கடைகளில் கேட்டால் கிடைக்கும். இரண்டு லிட்டர் நீரில், அரை டீஸ்பூன் பதிமுகம் பொடியைப் போட்டு, ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைத்தாலே, இயற்கையான இளஞ்சிவப்பு நிறத்திற்கு நீர் மாறுவதைப் பார்க்கலாம்.
இதை ஆற வைத்து வடிகட்டி, கண்ணாடி பாட்டிலில் ஊற்றி வைத்து, சாதாரணமாக நாம் குடிக்கும் தண்ணீருக்கு பதிலாக, இதைக் குடிக்கலாம். அப்படி இல்லாவிட்டால், ஒரு நாளைக்கு ஒரு டம்ளர் குடித்தாலும் போதும்.
டாக்டர் ஆர்.மைதிலி, ஆயுர்வேத மருத்துவர், சென்னை. 99622 62988 drmythiliayur@gmail.com
