சொன்னதையே திரும்ப திரும்ப சொல்வது அல்சைமர் அறிகுறி
சொன்னதையே திரும்ப திரும்ப சொல்வது அல்சைமர் அறிகுறி
PUBLISHED ON : மார் 08, 2026

பக்கவாதத்தின் ஆரம்ப அறிகுறிகளை கண்டறிவது முதல், மறதி நோயின் தாக்கத்தைத் தடுப்பது வரை எப்படி என விளக்குகிறார், நரம்பியல் நிபுணர் டாக்டர் முருகேசன். பக்கவாதம் என்றால் என்ன? அதன் ஆரம்ப அறிகுறிகள் என்ன?: கை, கால்கள் பலவீனம் ஆவதை பக்கவாதம் என்கிறோம். மூளைக்கு செல்லும் ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படும் போது, செல்கள் பாதிக்கப்பட்டு கை, கால்களுக்கு வரும் நரம்பு பாதித்து பக்கவாதம் ஏற்படுகிறது.
பக்கவாதம் வரும் முன் சிலருக்கு ஒரு சில மணித்துளிகள் மட்டும் கை, கால்கள் பலவீனம் அடைந்து இயல்பு நிலைக்கு திரும்பும். அதை அலட்சியமாக எடுத்துக்கொள்ளாமல் மருத்துவமனைக்கு உடனடியாக செல்ல வேண்டும்.
மூளை ரத்தக்கசிவு மற்றும் மூளை அடைப்பு இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்ன?: மூளைக்கு நான்கு ரத்தக்குழாய் வழியாக ரத்த ஓட்டம் செல்கிறது. ரத்தக்குழாய்கள் சிதைந்து, வெடித்து மூளையில் ரத்தம் பரவுவது ரத்தக்கசிவு என்றும், ரத்த குழாய்களின் அடைப்பு ஏற்பட்டு ரத்தம் மூளைக்கு செல்லாமல் தடைபடுவது மூளை அடைப்பு என்றும் கூறுவோம். இந்த இரண்டு சூழல்களிலும் பக்கவாதம் ஏற்படும்.
வலிப்பு ஏற்பட்டால் அருகிலுள்ளவர்கள் செய்ய வேண்டிய முதல் உதவி என்ன?: மூளையின் செல்கள் வேகமாக செயல்பட்டு வலிப்பு ஏற்படுகிறது. முதலில் ஆக்சிஜன் தேவையான அளவு கிடைக்க காற்றோட்டமான சூழல் ஏற்படுத்தவேண்டும். கைகளில் கத்தி, இரும்பு பொருட்களை கொடுக்க கூடாது.
இறுக்கமான ஆடைகள் தவிர்த்து, இலகுவான ஆடைகள் சரியாக இருக்கும். பொதுவாக, இரண்டு, மூன்று நிமிடத்தில் வலிப்பு நின்றுவிடும். ஐந்து நிமிடத்திற்கு மேல் தொடர்ந்தால் உடனடியாக மருத்துவமனை அழைத்து செல்ல வேண்டும். வலிப்பு ஏற்படுபவர்கள் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதிக நேரம் மொபைல் மற்றும் லேப்டாப் பயன்படுத்துவது நரம்பு ஆரோக்கியத்தை பாதிக்குமா?: அதிக நேரம் பயன்படுத்துவது கண் நரம்புகள், பார்வைகளை பாதிக்கும். நேரடியாக பிற நரம்புகளை பாதிக்கும் என கூற இயலாது.
ஆனால், அதிக பயன்பாடு மன அழுத்தம், துாக்கமின்மை, கவனக்குறைவு போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தி பல்வேறு ஆரோக்கிய பாதிப்புகளுக்கு அடித்தளம் அமைத்துவிடும்.
மறதி நோயின் ஆரம்ப அறிகுறிகள் என்ன?: சிறிய அளவிலான மறதி என்பது அனைவருக்கும் இருக்கும். ஆனால், பொருளை வைத்து விட்டு நீண்டநேரம், அடிக்கடி தேடுவது.
தெரிந்த இடங்களுக்கு செல்லும் வழி, பெயர்களை மறப்பது, கேள்விகளை திரும்ப திரும்ப கேட்பது அல்லது சொன்னவற்றை மீண்டும் மீண்டும் சொல்வது ஆரம்ப அறிகுறிகள். முற்றிய நிலையில் ஆல்சைமர் நோயாக மாறி கட்டாய சிகிச்சை தேவைப்படும்.
மூளை ஆரோக்கியமாக இருக்க தினசரி என்ன பழக்கங்கள் அவசியம்?: மூளைக்கு குளூக்கோஸ் சத்து, ஆக்சிஜன் சரியாக கிடைக்கவேண்டும். உணவு பழக்க வழக்கம் சரியாக இருப்பதும், சரியான துாக்கம், மூச்சுப்பயிற்சி அவசியம். தவிர, புகைப்பழக்கம், போதை, ஆல்கஹால் மூளையின் ஆரோக்கியத்தை பாதிக்கும்.
- டாக்டர் முருகேசன்
தலைமை நரம்பியல் நிபுணர்
அரசு மருத்துவக்கல்லுாரி மற்றும் இ.எஸ்.ஐ., மருத்துவமனை
94441 62436.

