PUBLISHED ON : ஆக 09, 2026

மழலை, இளமை போலவே முதுமையும் ஒரு பருவம் தான்; அதை கொண்டாட 'செல்ப் லவ்' அவசியம் என்கிறார், மனநல மருத்துவர் ஷாலினி பட்டீஸ்வரன்.
நம் சமூக கட்டமைப்பே, உனக்கு என்ன வேணும்; உனக்கு என்ன பிடிக்கும் என கேட்காமல், பிறரின் கட்டளைக்கும், தேவைக்குமாக மட்டுமே வாழ துாண்டுவதாக அமைந்துள்ளது.
குழந்தையிடம் கூட, உனக்கு இது பிடித்திருக்கிறதா என கேட்பதில்லை. முதியவர்களிடமும் நம் தேவையை, நம் எதிர்பார்ப்பை திணிக்கிறோம். 60 வயது வரை பிறருக்காக வாழ்ந்தவர்கள், சில காலமாவது தனக்காக வாழ விரும்புவதில் எந்த தவறும் இல்லை. இதைத்தான் தன்னை நேசிப்பது, செல்ப் லவ் என்கிறோம்.
பிடித்த இடங்களுக்கு பயணம் செல்வது, பிடித்ததை வாங்கி சாப்பிடுவது, புதிய நண்பர்களுடன் பேசுவது, புதிய விஷயங்களை கற்று கொள்வது போன்றவை மூலமாக முதுமையின் ஒவ்வாமையாக இருக்கும் வெறுமையை விரட்ட முடியும்.
இதற்கு பிள்ளைகள் ஒத்துழைப்பது அவசியம். முதியோருக்கு என்ன தேவை என மகனோ, மகளோ தீர்மானிக்க கூடாது. அவரவர் முடிவு எடுக்க வழிவிட வேண்டும்.
பேரக்குழந்தைகளை தலையில் கட்டி விட்டு, சுய வாழ்க்கைக்குள் சென்று விடுவது சரியல்ல. சும்மாதானே இருக்கிறாய் என எந்த பொறுப்பையும் முதியோர் மீது திணிக்க யாருக்கும் உரிமை இல்லை.
பெரியவர்களுக்கும், தங்களுக்குமான எல்லையை புரிந்து வைத்திருக்கும் குடும்பங்கள், ஆரோக்கியமான கட்டமைப்பில் மகிழ்ச்சியாக இருக்கின்றன.
நாம் எப்படி நம் பெற்றோரை மதிக்கிறோம் என்பதையே அடுத்த தலைமுறையும் பின்பற்றும். ஏனெனில் நமக்கும் முதுமை வரும், என்கிறார் ஷாலினி.
-- ரா.வித்யா
