PUBLISHED ON : ஏப் 26, 2026

கோடை வெயில் சுட்டெரிக்கத் தொடங்கி விட்டது. வியர்வையும், உடலில் நீரிழப்பும், சோர்வும் ஒரு புறம் இருந்தாலும் குழந்தைகளை பல விதமான நோய்கள் தாக்கக் கூடிய அபாயம் உள்ளது. பொதுவாகவே அம்மை, தோல், கண் நோய்கள், சிறுநீர் சார்ந்த பிரச்னைகள், வயிற்றுப்போக்கு போன்றவை அதிகம் ஏற்படுகின்றன. இவை, மாசடைந்த காற்று, துாய்மையற்ற நீர், சுகாதாரமற்ற உணவு போன்றவற்றால் ஏற்படுகின்றன.
அம்மை
பொது வாக வைரஸ் கிருமிகளால் ஏற்படக் கூடியவை. 'மீசில்ஸ்' எனப்படும் மணல் வாரியம்மை அல்லது விளையாட்டு அம்மை, சிக்கன் பாக்ஸ் என்கிற முத்து மாரியம்மை என பல வகைகள் உண்டு.
இவை, காற்றின் மூலமாக பரவக்கூடியவை என்பதால், குழந்தைகளுக்கு வகுப்பறையில் நெருக்கமாக அமரும் போதும், காற் றோட்டம் குறைவாக இருக் கும் போதும் வேகமாக பரவுகிறது. விளையாடும் போதும், தும்மல், இருமல் போன்றவற்றின் மூலமும், குழந்தைகளுக்கு தொற்றக் கூடும்.
காய்ச்சல், இருமல், கண்கள் சிவந்து போவது, தோலில் தடிமன்கள், தோல் அரிப்பு போன்றவை இதன் அறிகுறிகள்.
சில சமயங்களில், வாந்தி, நிமோனியா, வலிப்பு போன்றவையும் ஏற்படலாம்.
தடுக்கும் முறைகள்
குழந்தைகளுக்கு சரியான வயதில் தடுப்பூசிகள் போட்டு அம்மை நோய்கள் வராமல் தடுக்க முடியும்.
தட்டம்மை தடுப்பூசியை ஒன்பது மாதத்திலும், 15வது மாதத்திலும், 5 வயதிலும் போட வேண்டும்.
பயிரம்மை தடுப்பூசி, 15 வது மாதத்திலும், 18 வது மாதத்திலிருந்து நான்கு வயதிற்குள்ளும் இரண்டாவது தவணை செலுத்த வேண்டும்.
கோடைக்காலத்தில் கூட்டம் அதிகம் இருக்கும் இடங்களுக்கு, குழந்தை களை அழைத்துச் செல் வதை தவிர்க்க வேண்டும். மற்ற குழந்தைகளுக்கு அம்மை நோய் பரவாமல் இருக்க, பாதிக்கப்பட்ட குழந்தையை தனிமைப் படுத்தி சிகிச்சை அளிக்க வேண்டி யது கட்டாயம்.
தோல் நோய்கள்
கோடைக்காலத்தில் வியர் குரு, வெப்பக் கட்டிகள், புண்கள் அதிகம் குழந்தை களை பாதிக்கின்றன. இதனால் நமைச்சல், புண்களில் நீர் மற்றும் சீழ் வடிதல் , காய்ச்சல் ஏற்பட லாம்.
தடுக்கும் வழிகள்
தினமும் இரண்டு முறை குளிக்க வைக்க வேண்டும். விளையாடி விட்டு வந்தவுடன், கை கால்களை கழுவி சுத்தம் செய்ய வேண்டும். தண்ணீர் போதுமான அளவு குடிக்க வேண்டும். பழச் சாறுகள், இளநீர், மோர் போன்ற நீர் பானங்களை அதிகம் தர வேண்டும்.
வெயில் அதிகம் உள்ள மதிய வேளையில், வெளியில் செல்ல குழந்தைகளை அனுமதிக்கக் கூடாது .
தவிர்க்க முடியாத நேரங் களில் குடையை பயன்ப டுத்த வேண்டும். வெள்ளை, வெளிர் நிற ஆடைகளை அணிய வேண்டும். கருப்பு, அடர் நிறங்களை தவிர்க்க வேண்டும்.
கண் நோய்கள்
'மெட்ராஸ் ஐ' என்ற வைரஸ் நோய் அதிக அளவில் கோடைக் காலத்தில் ஏற்படுகிறது. இது மட்டுமல்லாமல், கண் எரிச்சல், அரிப்பு, சிவந்து போவது போன்ற பாதிப்புகளும் ஏற்படுகின்றன.
கூட்டமான இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். கைகளால் கண்களை தொடுவது, கசக்குவது கூடாது. அடிக்கடி துாய நீரைக் கொண்டு கண்களை சுத்தம் செய்வது நல்லது. கண் நோய் வந்தால் உடனே கண் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.
சிறுநீர் உபாதைகள்
அடிக்கடி சிறுநீர் கழித்தல், குறைந்த அளவு மஞ்சளாக போதல், சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், சிறுநீர் பாதையில் வலி, அடிவயிற்று வலி போன்றவை ஏற்படும்.
தடுக்கும் வழிகள்
தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். ஓ.ஆர்.எஸ்., கரைசலை குடிக்கத் தரலாம்.
சிறுநீர் பரிசோதனை செய்து, கிருமித் தொற்று இருந்தால், தகுந்த சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
டாக்டர்.க.ராவணன், குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் ராவ்'ஸ் சைல்டு கிளினிக், அரக்கோணம் 94449 55329drkravanan@gmail.com

