மாரடைப்பை விட மோசமான நோய் அறிகுறிகள் அறிந்தால் ஆபத்தில்லை
மாரடைப்பை விட மோசமான நோய் அறிகுறிகள் அறிந்தால் ஆபத்தில்லை
PUBLISHED ON : மே 24, 2026

மாரடைப்புக்கான பொதுவான அறிகுறிகளே நுரையீரல் ரத்த அடைப்பின் போதும் ஏற்படுவதால், நோய் கண்டறிவதற்கு முன்பே, உயிரிழப்பது அதிகரித்து வருகிறது.
இந்நோய்க்கு, அரசு மருத்துவமனையில் மட்டும் மாதத்தில் 3-4 பேர் அனுமதிக்கப்படுவதாக கூறுகிறார், அரசு மருத்துவமனை, இதய நோய் பிரிவு துறைத்தலைவர் டாக்டர் நம்பிராஜன்.
நுரையீரலில் உள்ள ரத்த குழாய்களில் ரத்தம் உறைந்து அடைப்பு ஏற்படும் நோய் பற்றி கூறுங்களேன்?
பல்மோனரி எம்பாலிசம் எனும் நுரையீரல் ரத்த குழாய் அடைப்பு நோய், கால்களில் உள்ள ஆழமான நரம்புகளில் உருவாகும் ரத்த உறைவுக்கட்டிகள், ரத்த ஓட்டம் வழியாக, இதயத்தின் வலதுபுறமுள்ள நுரையீரலுக்கு சென்று, ரத்த குழாய் அடைப்பை ஏற்படுத்துவதால் உண்டாகிறது. இதனால், திடீர் மூச்சுத்திணறல் ஏற்படுவது, நெஞ்சுவலி, வேகமான இதயத்துடிப்பு, தலைச்சுற்றல், மயக்கம், அதீத வியர்வை உள்ளிட்ட சில அறிகுறிகள் தோன்றும். இது மாரடைப்பை விட தீவிரமான நோயாக கருதப்படுவதால், உடனே சிகிச்சையை துவங்க வேண்டும்.
யாருக்கு இந்நோய் வரலாம்?
அறுவை சிகிச்சை, எலும்பு முறிவு உள்ளிட்ட காரணங்களால் மாதக்கணக்கில் படுத்தே இருப்பவர்கள், நீண்ட நேரம் அமர்ந்து, நின்று கொண்டு வேலை பார்ப்பவர்களுக்கு, புற்றுநோய், சிறுநீரகம், கல்லீரல் பாதிப்பு, மகப்பேறுக்கு பிந்தைய நிலை, கருத்தடை மாத்திரை சாப்பிடுவோர், நீரிழிவு, ரத்த அழுத்தம், உடல்பருமன் இருப்பவர்களுக்கு வரும் வாய்ப்புகள் அதிகம். வெரிக்கோஸ் பாதிப்பு இருப்பவர்களுக்கு கால் ந ரம்புகள் சுருண்டிருப்பதாலும், ரத்த கட்டிகள் உருவாகலாம். பிறவியிலே புரோட்டீன் சி-எஸ்., குறைப்பாடு இருப்பவர்களுக்கு ரத்தம் உறையும் தன்மை அதிகரிக்கும்.
சிகிச்சை முறை என்ன?
'டி-டைமர்' என்ற ரத்த பரிசோதனை செய்து, நெகட்டிவ் என்றால் பல்மோனரி எம்பாலிசமாக இருக்க, 90 சதவீதம் வரை வாய்ப்பில்லை. பாசிட்டிவ் என வந்தால், சிகிச்சை துவங்கப்படும். சிடி- பல்மோனரி ஆஞ்சியோகிராம் செய்து நுரையீரலில் எங்கு அடைப்பு ஏற்பட்டுள்ளது என கண்டறியப்படும்.
'த்ரோம்போலைசிஸ்' என்ற ரத்த கட்டியை கரைக்கும் மருந்துவ நடைமுறை துவங்கப்படும். அறிகுறி தென்பட்ட 14 நாட்களுக்குள் இச்சிகிச்சையை துவங்க வேண்டும். ரத்தம் உறைதலை தடுப்பது, மீண்டும் ரத்தம் உறையாமல் இருப்பதை உறுதிப்படுத்தவும், பிரத்யேக மருந்துகள் ஊசி மூலம் செலுத்தப்படும். இத்துடன் கத்தீட்ரல் வழி சிகிச்சை மூலமாகவும், ரத்த கட்டிகள் கரைக்கப்படும். இறுதி நிலையில், அறுவை சிகிச்சை மூலமாக நுரையீரலில் உள்ள கட்டிகள் அகற்றப்படும்.
இந்நோய் வராமல்: தடுப்பது எப்படி?
நீண்ட நேர பயணங்களின் போது காலின் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் கம்பிரஷன் சாக்ஸ் வாங்கி அணிவது, அமர்ந்து கொண்டே வேலை செய்வோர், சிறிது நேர இடைவெளியில் கால் அசைப்பது, நடப்பது, எளிய பயிற்சிகள் செய்வது, உடல் எடையை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம்.
பெரும்பாலும் இந்நோய், 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, குறிப்பாக ஆண்களுக்கே அதிகம் ஏற்படுகிறது. கர்ப்ப காலத்தின் போது அதீத மூச்சிரைப்பு மூலம், பெண்களுக்கு இந்நோய் இருக்கிறதா என பரிசோதித்து அறியலாம்.
தற்போது அரசு மருத்துவமனைக்கு மாதம் 3-4 பேர், இந்நோய்க்கு சிகிச்சை பெறுகின்றனர். அறிகுறி தென்பட்டதும் உரிய சிகிச்சைக்கு உட்படுத்தும் போது, இறப்பு நிகழாமல் தடுக்கலாம்.
