PUBLISHED ON : பிப் 22, 2026

பார்ப்பதற்கு ஒல்லியாக, உடல் பருமன் குறைவாக இருப்போருக்குக் கூட வயிற்றுப் பகுதியில் அதிக கொழுப்பு சேர்ந்து, இன்சுலின் உடல் முழுமையாக சுரந்து கொள்ள முடியாத தன்மை இருக்கும். இது இதய நோய் வருவதற்கான ஆபத்தை மேலும் அதிகரிக்கிறது.
மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது, நம் நாட்டில், சர்க்கரை நோயாளிகள் அதிக ஆபத்தை எதிர்கொள்கின்றனர். இவர்களுக்கு மிக இளம் வயதிலேயே இதய ரத்தக்குழாய் அடைப்பு ஏற்படுவதோடு, இதனால் ஏற்படும் இறப்பு விகிதமும் அதிகமாக உள்ளது.
இதய ரத்தக்குழாய் நோய், இதய செயலிழப்பு, பக்கவாதம், கால்களுக்குச் செல்லும் ரத்தக்குழாய் பாதிப்பு என பல வகைகளில் இந்த பாதிப்புகள் வெளிப்படும்
அதிக ரத்த சர்க்கரை காரணமாக, நரம்பு மண்டல பாதிப்பு ஏற்பட்டு, வலியை உணர முடிவதில்லை.
ரத்த ஓட்டம் குறைந்து, வலி தெரியாத வகையிலான மாரடைப்பு' ஏற்படுகிறது.
இதற்கு பிரதான காரணம், கட்டுப்பாடற்ற சர்க்கரை, ரத்தக் குழாய்களின் உட்புறச் சுவர்களில் அழுத்தத்தை உருவாக்கி, நச்சுத் தன்மை கொண்ட வேதிப்பொருட்களை உருவாக்குகிறது.
இதனால், ரத்தக் குழாய்களில் வீக்கம் ஏற்படுகிறது ; இதயத்தின் மகா தமனி தடித்து, விடுகின்றன. ரத்தக் குழாய் அடைப்பு உள்ள பகுதியில் அழற்சி ஏற்பட்டு, மாரடைப்பு உண்டாகிறது.
ஏசியன் இந்தியன் பினோடைப்
நம் நாட்டில்,இந்த பாதிப்புகள் தீவிரமாக இருப்பதற்கு காரணம், 'ஏசியன் இந்தியன் பினோடைப்' எனப்படும், வயிறு, இடுப்புப் பகுதியைச் சுற்றி அதிக கொழுப்பு சேருவது தான். இதற்கு நடு உடல் பருமன் என்று பெயர். இது நம் நாடு உட்பட ஆசிய மக்களின் மரபணுவிலேயே உள்ளது.
குறைவான உணவு சாப்பிட்டு, அதிக உடல் உழைப்பு செய்யும் விதமாக, மரபணு ரீதியில், நம் உடலமைப்பு உள்ளது. நம் முன்னோர்கள் அப்படித் தான் வாழ்ந்தனர். நம்முடைய வாழ்க்கை முறை, 30 ஆண்டுகளில், இதற்கு நேர் எதிராக, அதிக உணவு, குறைந்த உடலுழைப்பு என்று மாறிவிட்டது.
இது இதய ரத்தக்குழாய் நோய்களை விரைவாகத் துாண்டுகிறது. இதனால், ஐரோப்பியர்களை விட, ஆசிய நாட்டவருக்கு, 5 - -10 ஆண்டுகளுக்கு முன்னதாகவே இதய நோய்கள் ஏற்படும் போக்கு அதிகரித்து விட்டது.
ரத்த நாளங்களில் அடைப்போ, உயர் ரத்த அழுத்தமோ இல்லாத நிலையிலும், சர்க்கரை நோயால் இதயத் தசைகளில் மாற்றங்கள் ஏற்பட்டு, இதயம் பலவீன மடையலாம். இது இறுதியில் இதயச் செயலிழப்பிற்கு வழிவகுக்கும்.
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்களில் அடைப்பு, பாதிப்பு ஏற்படுவதால், 'இஸ்கிமிக்' எனப்படும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் மிக அதிகம் உள்ளது.
வயிற்றுப் பகுதி கொழுப்பைக் குறைக்க, சுத்திகரிக்கப்பட்ட மாவுச்சத்து உணவுகளைக் குறைத்து, பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், பயறு வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதோடு முறையான உடற்பயிற்சியும் செய்ய வேண்டும்.
மருத்துவ சிகிச்சைகள்
சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது மட்டுமின்றி, இதயத்தைப் பாதுகாக்கும் நவீன மருந்துகளான, எஸ்.ஜி.எல்.டி - 2 இன்பிட்டார்ஸ், ஜி.எல்.பி - --1 ரிசெப்டார் போன்றவற்றை மருத்துவர் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்ளும்போது, இதய பாதிப்பின்றி இருக்கலாம்.
டாக்டர் கெ. துர்காதேவி, இதயநோய் மூத்த நிபுணர், ஐஸ்வர்யா மருத்துவமனை. 9840105510cc@aishwarya.in

