PUBLISHED ON : மார் 01, 2026

நம் நாட்டில், ஆண்களுக்கு ஏற்படும் புற்று நோய்களில் பொதுவாக காணப்படுவது, வாய்ப்புற்று நோய் எனப்படும், 'ஓரல் கேன்சர்'. வாய்ப்புற்று நோய் இளம் வயதினர், பெண்களையும் பாதிக்கலாம்.
நீண்ட நாளாக ஆறாத புண், வெண்மை, சிவப்பு நிறப்புள்ளி, தழும்பு வாயில் தோன்றி வளர்ந்து, கட்டுப்படுத்த முடியாத புற்று நோயாக மாறலாம். வாய்ப்புற்று நோய், வாயில் உள்ள மேல் தாடை, கீழ் தாடை, கன்னத்தின் உள்பகுதி, உதடு, நாக்கின் அடிப்பகுதியில் ஏற்படும்.
வாய்ப்புற்று நோய், சிறிய வலி இல்லாத புண்ணாகவோ, கட்டியாகவோ தோன்றும். இந்த சிறிய புண் தழும்பாக மாறி, செல்களில் மாற்றத்தை உண்டாக்கி, கேன்சரை உண்டாக்கும்.
ஆரம்ப அறிகுறிகள்: வாயில் ஆறாத புண், வெள்ளை, சிவப்பு நிறத்தழும்பு, உள் கன்னத்தில் சிறிய கட்டிகள், உணவு சாப்பிடும் போது எரிச்சல், உதடு, நாக்கு மரத்துப்போதல், வாயைத் திறக்க சிரமம், குரலில் மாற்றம், சில நேரங்களில் வாயில் ரத்தம் கசியலாம்.
மூன்று வகைகள்: கொழுப்புக் கட்டி, உடம்பின் மற்ற பகுதிகளுக்கு பரவாத சாதாரணக் கட்டி, இரண்டையும் அறுவை சிகிச்சை மூலம் அகற்றி விடலாம். மெதுவாக வளரும் இதையும் அறுவை சிகிச்சை செய்து அகற்றலாம். மூன்றாவது, நம் செல்கள் கட்டுப்பாடின்றி வளர்வதால் வரக்கூடிய கேன்சர் கட்டி. இது சிறியதாக உருவாகி, உடலின் மற்ற பகுதிகளுக்கு பரவக் கூடியது.
அடுத்தது, வாயில் தோன்றும் வெள்ளை, சிவப்பு நிறத் தழும்புகள் புற்று நோயின் முந்தைய நிலை. இதுவும், புற்றுநோயாக மாற வாய்ப்புகள் அதிகம்.
6 எக்ஸ் காரணிகள்
* எக்ஸ் 1 ஸ்மோக்கிங் - புகை பிடித்தல்.
* எக்ஸ் 2 ஸ்பிரிட் -மதுப்பழக்கம்.
* எக்ஸ் 3 ஷார்ப் டீத் -கூர்மையான பற்கள்.
* கூர்மையான பல் இருந்தால், தொடர்ந்து வாயில் உள்ள செல்களை அழுத்தும். நீண்ட காலத்திற்கு இது போன்று கிரானிக் இரிட்டேசன் ஆவதால், கேன்சராக மாறும்.
* எக்ஸ் 4 ஸ்பைசி புட் - காரம், மசாலா அதிகம் உள்ள, ஊட்டச்சத்து குறைந்த உணவுகள்.
* எக்ஸ் 5 செக்ஸ் பாலியல் நோய்கள், ஹெச்.ஐ.வி., வைரஸ்.
* எக்ஸ் 6 - சிண்ட்ரோம் மரபணு குடும்ப வரலாறு.
தாமதம்: நம் நாட்டில், 80 சதவீதம் பேர் தாமதமாகவே மருத்துவ ஆலோசனை பெறுகின்றனர். பெரும்பாலானோர் இரண்டு, ஆறு மாதங்கள் தாமதம் செய்கின்றனர்.
தங்களுக்கு ஏற்படும் அறிகுறிகளை, ஒன்றும் இருக்காது அப்புறம் பார்க்கலாம் மருத்துவரிடம் சென்றால், ஒரு வேளை புற்று நோய் என்று கூறிவிட்டால் என்ன செய்வது என்ற பயம், தயக்கத்தோடு வருவதில்லை. இது தவிர, வேலை பளு, நேரமின்மை என்று பல காரணங்களாலும் தாமதமாக வருகின்றனர்.
வாய்புற்று நோயின் உண்மையான எதிரி நோயல்ல, தாமதம் செய்வது தான். இந்த மனநிலை மாறினால் உயிர்களை காப்பாற்றலாம்.
நிலைகள்: புற்று நோய் வளர்வதைப் பொருத்து, நான்கு நிலைகளாகப் பிரிக்கலாம். முதல் இரண்டு நிலைகளில், பெரும்பாலான புற்று நோய்களைப் போன்றே எளிதாக 90 சதவீதம் குணப்படுத்தலாம்.
சிறிய அறுவை சிகிச்சை மூலம் குறைந்த செலவில், உடலுக்கும், முகத்துக்கும் எந்தவித பாதிப்பும் இல்லாமல், சரி செய்யலாம்.
நோய் பாதிப்பு, நிலை 3, 4ல் இருந்தால், 30 சதவீதம் மட்டுமே குணப்படுத்த முடியும். அறுவை சிகிச்சை, செலவு, பாதிப்பும் மிகப்பெரிய அளவில் இருக்கும்.
இரண்டு வார விதி: வாயில் ஏற்படும் புண், தழும்பு, காயம் போன்றவை, 14 நாட்களுக்கு பின்பும் குணமாகவில்லை என்றால், மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.
மாதம் இரு முறை சுய பரிசோதனை செய்ய வேண்டும். கண்ணாடி முன் நின்று கன்னம், நாக்கு, உதடு, ஈறுகளில் ஏதாவது காயம், கட்டி, வெள்ளை, சிவப்பு தழும்புகள் உள்ளதா என்று சோதிக்க வேண்டும்.
புகையிலை: நம் நாட்டில் வாய் புற்று நோய் பாதிப்பு உள்ளவர்களில் 80 சதவீதம் பேர் புகையிலை பழக்கம் உள்ளவர்கள். இப்பழக்கத்தை நிறுத்தினால் நோயைத் தடுக்கலாம். புகையிலையில் உள்ள நைட்ரோசமின்ஸ் என்ற வேதிப்பொருள், புற்று நோயை உண்டாக்கக் கூடியது.
ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பல் மருத்துவரிடம் முழுமையாக பல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் 50 சதவீத புற்று நோய் இறப்புகளை தடுக்க முடியும்.
டாக்டர் எஸ்.பி. சேதுராஜன்,
வாய், முக சீரமைப்பு சிறப்பு அறுவை சிகிச்சை மருத்துவர்,
அரசு பல்நோக்கு மருத்துவமனை, சென்னை
044 - 26151514, 99403 94979
sethu.omfs@gmail.com

