PUBLISHED ON : ஆக 23, 2026

அதிகரிக்கும் காற்று மாசுபாடு, மாறிவரும் வாழ்வியல் சூழல், புகைப்பழக்கம் மற்றும் பல்வேறு தொற்று நோய்கள் காரணமாக நுரையீரல் பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
இதுபற்றி, அரசு மருத்துவமனை, நெஞ்சக துறை தலைவர் டாக்டர் கீர்த்திவாசன் நம்மிடம் பகிர்ந்தவை:
நுரையீரல் எதனால் பாதிக்கப்படுகிறது?
வைரஸ் அல்லது பாக்டீரியா தொற்றுகள், புகை பிடித்தல், சுற்றுப்புற சூழல் மாசுபாடு, வேலை செய்யும் இடத்தில் ஏற்படும் அலர்ஜி, மரபணு ரீதியான பாதிப்புகள் மற்றும் நமது உடலுக்கு எதிராக நமது எதிர்ப்பு சக்தியே அதிகமாகச் செயல்படும் 'ஆட்டோ இம்யூன்' நிலை ஆகியவற்றால் பாதிக்கப்படுகிறது.
சாதாரண நெஞ்சு சளி எப்போது நிமோனியாவாக மாறுகிறது?
நிமோனியா பாதிப்பு, பாக்டீரியா, வைரஸ் அல்லது பூஞ்சை போன்ற கிருமித் தொற்றுகளால் ஏற்படுகிறது. இவை காற்றின் மூலமாகவோ அல்லது புரையேறும் போது நம் எச்சிலில் உள்ள கிருமிகள் நுரையீரல் பகுதிக்குச் செல்வதாலோ பரவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் போது, சாதாரண சளி நிமோனியாவாக மாறுகிறது.
சர்க்கரை நோய் உள்ளவர்கள், புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொள்வோர், ஸ்டீராய்டு மருந்துகள் சாப்பிடுவோருக்கு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். மதுப்பழக்கம், புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கும், சாதாரண நெஞ்சு சளி நிமோனியாவாக மாறுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.
எத்தனை நாட்களுக்கு மேல் இருமல் நீடித்தால் அதை அலட்சியப் படுத்தக்கூடாது?
ஒரு வாரம் அல்லது இரண்டு வாரத்திற்கு மேல் தொடர்ச்சியாக இருமல் இருந்தால், கண்டிப்பாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.
ஏற்கனவே ஆஸ்துமா, நுரையீரல் பிரச்னை இருப்பவர்கள், ஆறு மாதத்திற்கு ஒருமுறை பல்மனரி பங்ஷன் டெஸ்ட் எடுத்து, நுரையீரல் செயல்பாட்டை பரிசோதித்து கொள்ளலாம்.
பவுண்டரி, லேத், ஜவுளி உற்பத்தி ஆலை, ஒர்க் ஷாப் மற்றும் மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளில் வேலை செய்வோர் கட்டாயம் ஆண்டுக்கு ஒருமுறை, இப்பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
ஆஸ்துமா பரம்பரையாக மட்டுமே வரக்கூடியதா?
பரம்பரையாகவும் வரக்கூடும். மரபணு காரணங்களை தவிர, காற்று மாசுபாடு, தொழில்சாலை புகை, அலர்ஜி போன்றவற்றாலும் ஆஸ்துமா வரலாம். செல்லப்பிராணி வளர்க்கும் சிலருக்கு, அலர்ஜி, தொற்று காரணமாக, ஆஸ்துமா ஏற்படலாம். இது, எந்த வயதிலும் வரலாம்.
தொடர்ந்து பஃபர் (Puffer) பயன்படுத்துவதால் நுரையீரல் சுயமாக செயல்படாமல் முடங்கி விடுமா?
இன்ஹேலர் எடுப்பது நல்லதல்ல என்ற தவறான எண்ணம் உள்ளது. உண்மையில், மாத்திரை, சிரப் அல்லது ஊசி மூலம் உட்கொள்ளும் மருந்துகளே, இன்ஹேலர் வடிவிலும் இருக்கின்றன. மருந்து நேரடியாக நுரையீரலில் சென்று படிந்து வேலை செய்ய வேண்டுமென்பதற்காகவே இன்ஹேலர் வடிவமைத்துள்ளனர். இது பாதுகாப்பான மருத்துவ முறைகளில் ஒன்று.
நுரையீரல் பாதிப்புகளுக்கு தடுப்பூசி போடுவது அவசியமா?
ஆம். குறிப்பாக பருவகாலங்களில் வரக்கூடிய ஃப்ளூ காய்ச்சலில் இருந்து தற்காக்க, தடுப்பூசி போட வேண்டும்.
நுரையீரல் பிரச்னை இருப்பவர்களுக்கு, ப்ளூ காய்ச்சல் வந்தால், அது ரிஸ்க்காக மாறலாம். ஆண்டுக்கு ஒருமுறை இத்தடுப்பூசி போட்டு கொள்ளலாம். நுரையீரல் தொற்றைத் தடுப்பதற்கான நிமோனியா தடுப்பூசியும் வாழ்நாளில் ஒரு முறை போடலாம்.
டாக்டர் கீர்த்திவாசன்
drskvin@yahoo.co.in
