PUBLISHED ON : செப் 13, 2026

ஆரோக்கியமாக வாழ பின்பற்ற வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பது குறித்து, அரசு மருத்துவமனை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பிரிவு, மாவட்ட உதவி மருத்துவ அலுவலர் டாக்டர் புவனேஸ்வரியிடம் கேட்டோம்.
சர்க்கரை, பிபி, உடல் பருமன் போன்ற வாழ்வியல் நோய்களைக் கட்டுப்படுத்த, யோகா எந்த வகையில் உதவுகிறது?
வாழ்வியல் நோய்கள் ஏற்பட, மன அழுத்தமே முக்கியக் காரணம். ஆசனங்கள், மூச்சுப் பயிற்சி மற்றும் தியானம் ஆகியவை சீரான ரத்த ஓட்டத்தை வழங்கி, இதயத்தின் செயல்பாட்டை மேம்படுத்துகின்றன. கலோரிகளை எரித்து வளர்சிதை மாற்றத்தை சீராக்குவதுடன், அதிக உணவு உண்ணும் பழக்கத்தைக் கட்டுப்படுத்துகிறது. இன்சுலின் ஏற்புத்தன்மையை சரிசெய்து, உள்ளுறுப்புகளின் இயக்கத்தை மேம்படுத்த யோகா முக்கிய பங்கு வகிக்கிறது.
நீண்ட நேரம் கம்ப்யூட்டர், செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் கழுத்துவலி, முதுகுவலி, கண் சோர்வுக்கு என்ன தீர்வு?
இதற்கு பிரத்யேக மூட்டுப் பயிற்சிகள் மற்றும் ஆசனங்கள் உள்ளன. கண் சோர்வைப் போக்க, பார்வைப் பயிற்சிகள் மற்றும் கண் மீது வைக்கும் 'பேக்ஸ்' (Eye packs) நல்ல பலன் தரும். 30 நிமிடங்களுக்கு ஒருமுறை, 20 நொடிகள் திரையிலிருந்து பார்வையைத் திசைதிருப்பி ஓய்வு தருவது அவசியம்.
யோகா அல்லது நடைப்பயிற்சியை எப்போது, எப்படி செய்ய வேண்டும்?
தினசரி 20 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை செய்யலாம். காலையில் பயிற்சி எடுத்தால், முழு நாளும் புத்துணர்வு தரும். மாலையிலும் செய்யலாம். அதிக சோர்வு, காய்ச்சல் அல்லது வயிறு நிறைந்திருக்கும் நேரங்களில் பயிற்சி கூடாது. ஜிம் போன்ற தீவிர உடற்பயிற்சிகளை, குறிப்பிட்ட வயதுக்கு மேல் தொடர்வதில் சிரமம் இருக்கலாம். ஆனால் யோகாவுக்கு வயது வரம்பே கிடையாது.
சமூக வலைதளங்களில் பிரபலமாகும், டீடாக்ஸ் பானங்கள் (Detox drinks) மற்றும் கிராஸ் டயட் முறைகள் பாதுகாப்பானவையா?
முற்றிலும் பாதுகாப்பானது அல்ல. இணையத்தைப் பார்த்துவிட்டு ஒரே வகையான ஜூஸ் மட்டுமே அருந்துவது, பட்டினி கிடப்பது போன்றவற்றால் உடலுக்குத் தேவையான சரிவிகித ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போகும். இதனால் நீரிழப்பு, தசை இழப்பு மற்றும் மெட்டபாலிச மாற்றங்கள் போன்ற ஆபத்துகள் நேரலாம்.
ஆரோக்கியமாக வாழ விரும்புவோர் பின்பற்ற வேண்டியவை என்ன?
சத்தான உணவு: சுவைக்காக மட்டுமே சாப்பிடாமல், உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து நிறைந்த சரிவிகித உணவை சாப்பிட வேண்டும்.
ஆழ்ந்த உறக்கம்: இரவில் சரியான நேரத்தில் தூங்கி, காலையில் விழிக்கும் முறையான தூக்கப் பழக்கம் அவசியம்.
உடல் இயக்கம்: ஒரே இடத்தில் உட்கார்ந்தே இருக்காமல் அன்றாடம் நடைப்பயிற்சி அல்லது ஏதேனும் உடற்பயிற்சியில் ஈடுபடுதல்.
மகிழ்ச்சியான உள்ளம்: எந்நிலையிலும் மன அழுத்தமின்றி உள்ளத்தை அமைதியாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்திருத்தல் அவசியம்.
