மழைக்காலத்தில் முதியோர் தவிர்க்க வேண்டியது என்னென்ன?
மழைக்காலத்தில் முதியோர் தவிர்க்க வேண்டியது என்னென்ன?
PUBLISHED ON : அக் 26, 2025

பொதுவாகவே, வயது முதிர்ந்தவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து இருக்கும். பருவமழை சமயங்களில் தொற்று பாதிப்பு அதிகரிக்கும் என்பதால், முதியோர் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.
ஆர்ய வைத்திய சிகிச்சாலயம் மற்றும் ஆராய்ச்சி நிறுவன மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் தாரா ஜெயஸ்ரீ இது குறித்து கூறியதாவது:
* மழை காலங்களில் ஜீரண சத்து மிகவும் குறைவாகவும், வாதம் மற்றும் தொற்று சார்ந்த நோய்கள் அதிகம் வரவும் வாய்ப்புண்டு. இஞ்சி, ஜீரகம், ஓமம், குருமிளகு, சுக்கு, திப்பிலி போன்றவற்றை அடிக்கடி எடுத்துக்கொள்ளலாம்.
* பிரிட்ஜில் வைத்த உணவு, தண்ணீரை தவிர்க்க வேண்டும். சூப், வெதுவெதுப்பான நீர், துளசி, இஞ்சி டீ போன்வற்றை அடிக்கடி எடுத்துக்கொள்ளலாம்.
* சூடான உணவு உண்பது நல்லது; சூடு பண்ணி உண்பதை தவிர்க்க வேண்டும்.
* பச்சை காய்கறி, கீரைகள் போன்றவற்றை இச்சமயத்தில் தவிர்க்கலாம். தயிர், கபத்தை அதிகரிக்கும் என்பதாலும், புளிப்பு, உப்பு ஆகியவற்றையும் தவிர்க்க வேண்டும்.
* தொற்று ஏற்பட வாய்ப்புள்ள இடங்களுக்கு, செல்லாமல் இருப்பது சிறந்தது. தவிர, குளிர் காற்று வீசும் நேரங்களில் வெளியிடங்களுக்கு செல்ல வேண்டாம். மழை, குளிர் சமயங்களில் வீடுகளுக்குள் முடிந்த அசைவுகளை கொண்டு, உடற்பயிற்சி செய்தால் போதுமானது.
* ஈரப்பதம் அதிகம் உள்ள இடங்களில் இருக்க வேண்டாம். மதிய நேரத்தில் உறங்காமலும், இரவு நேரத்தில் முழுமையாக உறங்குவதும் அவசியம்.
* மழை காலங்களில் அதிக தாகம் இருக்காது. ஆனாலும், நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
* பிராணயாமா, யோகா பயிற்சி செய்வதால், நுரையீரல் சார்ந்த பிரச்னைகளை கட்டுப்படுத்தவும், நினைவாற்றலை மேம்படுத்தவும் முடியும்.

