PUBLISHED ON : ஜூன் 28, 2026

கண் அறுவை சிகிச்சை செய்தவர்கள் அதற்கு பின் செய்ய வேண்டியவை, கூடாதவை குறித்து விளக்குகிறார் அரசு மருத்துவமனை கண் பிரிவு மருத்துவர் சரவணன்.
அவர் நம்மிடம் பகிர்ந்தவை:
60 வயதுக்கு மேற்பட்டவர்கள், எந்த அறிகுறியும் இல்லாவிட்டாலும் ஆண்டுக்கு ஒருமுறை கண் பரிசோதனை செய்வது அவசியம். கண்களை சுருக்கி, அழுத்தம் கொடுத்து படிப்பதை தவிர்ப்பது, வெளியில் செல்லும் போது சூரியனின் புற ஊதா கதிர்களில் இருந்து கண்களை பாதுகாக்க சன்கிளாஸ் அணிவது, ரத்த, சர்க்கரை பாதிப்பை கட்டுக்குள் வைத்து கொள்வது அவசியம்.
கண் அறுவை சிகிச்சைகளுக்கு பிறகு டாக்டர் பரிந்துரைப்படி சொட்டு மருந்து போட வேண்டும். மருந்து போடும் முன் கைகளை சோப்பால் கழுவ வேண்டும். அரிப்பு, எரிச்சல் இருந்தால், கைகளால் தேய்க்கவோ, தொடவோ கூடாது.
உடனே மருத்துவரை அணுக வேண்டும். ஓரிரு வாரங்களுக்கு தண்ணீர் படாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
கண்களில் கடுமையான வலி, திடீரென பார்வை மங்குவது அல்லது முற்றிலும் தெரியாமல் போவது, கண்கள் சிவப்பாவது, வீக்கம் ஏற்படுவது, தொடர்ந்து தண்ணீர் வெளியேறுவது, திடீரென புள்ளிகள் மிதப்பது, வெளிச்சம் அடிப்பதாக தோன்றினால் கட்டாயம் மருத்துவரை அணுக வேண்டும். அலட்சியம் காட்டினால், பார்வை பறிபோகும் அபாயம் ஏற்படலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
