PUBLISHED ON : பிப் 09, 2026

சென்னைக்கு அருகே உள்ள திருவேற்காட்டில் 1300 ஆண்டுகள் பழைமையான வேதபுரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான மூர்க்க நாயனார் பிறந்த பெருமைக்குரிய ஊர் இது.
இந்தக் கோயிலில், 'அநபாய சோழன்' என்று அழைக்கப்படும் இரண்டாம் குலோத்துங்கனுக்கும், 'பெரியபுராணம்' தந்த சேக்கிழார் பெருமானுக்கும் அருகருகே சிலைகள் உள்ளன. இதற்குக் காரணம், அவர்கள் இருவருக்கும் இடையே இருந்த ஆழ்ந்த நட்பும் ஆன்மிகத் தொடர்பும்தான். குலோத்துங்கன் தமிழை நன்கு கற்றதோடு, பாடல்கள் இயற்றும் வல்லமையும் பெற்றிருந்தார். தனக்கு எழுந்த ஓர் ஐயத்தை சேக்கிழார் போக்கியதால் மகிழ்ந்தார் மன்னர். அவரைத் தொண்டை மண்டலக் குன்றத்தூரிலிருந்து கங்கைகொண்ட சோழபுரத்திற்கு அழைத்துச் சென்று, தனது தலைமை அமைச்சராக ஆக்கிக்கொண்டார்.
சிவனடியார்களின் வரலாற்றைப் பாடுமாறு சேக்கிழாரைப் பணித்தவரும் இந்த அநபாய (அனபாந்த) சோழனே! இந்தக் கோயிலை அநபாய சோழன் கற்கோயிலாகப் புனரமைத்தார். சோழர் காலத்தில் இந்தப் பகுதி மிக முக்கியமான நிர்வாக மையமாக இருந்ததால், மன்னர்கள் அடிக்கடி வந்து செல்லும் இடமாகவும் இருந்தது. குன்றத்தூரில் பிறந்த சேக்கிழாரும் அடிக்கடி இந்தத் தலத்திற்கு வந்து வழிபட்டுள்ளார்.
பொ.யு. 1133 முதல் 1150 வரை ஆட்சிசெய்த அநபாய சோழனின் பெயரை, பெரியபுராணத்தில் பல இடங்களில் சேக்கிழார் குறிப்பிட்டுப் போற்றியுள்ளார். இந்தக் கோயிலில் இரண்டாம் ராஜேந்திரன் முதல் சம்புவராயர் காலம் வரையிலான கல்வெட்டுகள் உள்ளன.
தேவாரம் பாடிய திருஞானசம்பந்தர், 'வெள்ளி யான்உறை வேற்காடு' என்று இந்தத் தலத்தைப் பாடியுள்ளார். அதுபோலவே, அருணகிரிநாதரும் இந்தத் தலத்து முருகனை, 'வேதபுரீசுரர் தரு சேயே' என்று திருப்புகழில் போற்றியுள்ளார்.

