ADDED : மே 06, 2013 01:25 PM

இளைஞன் ஒருவன் கடன் பெற்றவர்களுக்கு அதைத் திருப்பித்தராத குற்றத்துக்காக சிறையில் அடைக்கப்பட்டான். அந்தச் சிறைக்கு ஒரு போதகர் வந்தார். ஒவ்வொருவரின் குறைகளையும் கேட்டறிந்தார். சிலர் கொலைக்காக, சிலர் கொள்ளைக்காக, சிலர் பலாத்காரம் செய்ததற்காக...என பல்வேறு குற்றங்களுக்காக சிறையில் இருப்பதைத் தெரிந்து கொண்டார்.
அவர்களுக்கு புத்திமதி சொல்லி நல்வாழ்வு வாழ கேட்டுக்கொண்டார்.
கடனுக்காக சிறையில் இருப்பவனைக் கண்டு அவரது உள்ளம் வருத்தப்பட்டது.
''பாவம்! என்ன காரணத்தாலோ இவனால் கடனைத் திருப்பிக் கொடுக்க முடியவில்லை. இதற்காக, சிறையில் வாடுகிறானே,'' என்ற கவலையுடன் அவர் சிறை அதிகாரியிடம் சென்றார்.
''ஐயா! இவன் செய்தது சாதாரண குற்றமே, இருப்பினும் பல ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ளான். இவனுக்குப் பதிலாக நான் தண்டனையை அனுபவிக்கிறேன். குடும்பஸ்தனான இவனை விட்டு விடுங்கள். இதுவரை கடன் தொல்லையை அனுபவித்த அவனது குடும்பம், இப்போது தலைவனில்லாமல் மேலும் தொல்லைகளை அனுபவிக்குமே!'' என்றார்.
உயரதிகாரிகளும் போதகரை சிறையில் அடைக்கலாம் என அனுமதி தரவே, இளைஞன் விடுவிக்கப்பட்டான். போதகர் சிறையில் இருந்தார்.
சிறையில் இருந்ததால் அவரது உடல் நலிந்தது. நோய்வாய்ப்பட்டு பல சிரமங்களை அனுபவித்தார். அந்த சிறைக்கு மற்றொரு போதகர் வந்தார்.
இளைஞனுக்காக சிறையில் வாடியவரிடம், ''யாரோ ஒருவனுக்காக. நீங்கள் இப்படி சிறையில் அடைபடலாமா?'' எனக் கேட்டார்.
அவருக்கு பதிலளித்த போதகர், ''இயேசுகிறிஸ்து தனக்கென இல்லாமல், உலக மக்களைக் காப்பாற்ற தன் இன்னுயிரையும் தந்தாரே! எனக்கு அந்த சந்தர்ப்பம் இன்னும் வரவில்லையே! இங்கென்ன என்னை சிலுவையிலா அறைந்து விட்டார்கள். அவர் உலக மக்களின் பாவத்தை தன்னுடையதாக ஏற்று, சிலுவையில் தொங்கினாரே! அவரது தலையில் முள் கிரீடம் அணிவிக்கப்
பட்டதே! அவரது கைகளிலும், கால்களிலும் ஆணிகள் அறையப்பட்டதே! அவர் அனுபவித்த தண்டனையுடன் ஒப்பிடும் போது, இவையெல்லாம் சிறு உடல் துன்பம் தானே!'' என்றார்.
வந்த போதகர் கண்கலங்கி விட்டார். சிறையில் அடைபட்டவர் விரைவில் விடுதலையாவதற்காக கர்த்தரிடம் ஜெபிக்க ஆரம்பித்தார்.