ADDED : ஏப் 01, 2013 01:57 PM

நமக்காகவே வாழ்ந்து, நமது பாவங்களை ஏற்று, தியாக வெள்ளமாய் மறைந்து, மீண்டும் உயிர்த்தெழுந்து அற்புதம் செய்தவர் இயேசுநாதர். அவரைப் பின்பற்றி வாழ்ந்த மக்களும் இருக்கிறார்கள். அவர்கள் வழியில் நாமும் நடைபோட, எலிசபெத் பிரையின் வரலாறைத் தந்திருக்கிறோம்.
இங்கிலாந்தில் செல்வச்செழிப்புமிக்க குடும்பத்தில் பிறந்தவர் எலிசபெத்பிரை. இவரது தந்தை ஜோசப் கர்னி. இவர் கர்னிஸ் பாங்கின் பங்குதாரர். தாயார் கேதரினும் பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர்.
எலிசபெத்தின் 12 வது வயதில் கேதரின் மரணமடைந்தார். தாயின் மரணம் எலிசபெத்தை வெகுவாக பாதித்தது. இவரே குடும்பத்தில் மூத்தவர் என்பதால் தங்கைகளையும், தம்பியையும் கவனிக்கும் பொறுப்பு தலையில் விழுந்தது. சிரமப்பட்டு ஆறு வருடங்கள் வாழ்க்கையை தள்ளியபிறகு 18 வயதில் வில்லியம் சேவரி என்ற நற்செய்தியாளர் நடத்திய கூட்டங்களில் கலந்து கொண்டார்.
''பசியாயிருந்தேன், எனக்கு போஜனங் கொடுத்தீர்கள்; தாகமாயிருந்தேன், என் தாகத்தை தீர்த்தீர்கள்; அந்நியனாயிருந்தேன், என்னை சேர்த்துக் கொண்டீர்கள்; வஸ்திரமில்லாதிருந்தேன், எனக்கு வஸ்திரம் கொடுத்தீர்கள்; வியாதியாயிருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்; காவலிலிருந்தேன், என்னை பார்க்க வந்தீர்கள்,'' என்ற இயேசு கிறிஸ்துவின் நற்செய்திகளை மையமாகக் கொண்டு சேவரியின் பிரசங்கம் அமைந்தது. மேலும் இயேசு கிறிஸ்து மனிதகுலத்தின் பாவங்களையும் அதன் விளைவான மரண தண்டனையையும் தம்மேல் ஏற்றுக் கொண்டு, சிலுவையில் தம் ஜீவனைக் கொடுத்தவர் என்ற செய்தி எலிசபெத்தை மிகவும் கவர்ந்தது. இயேசு கிறிஸ்துவை அவர் தனது இரட்சகராக ஏற்றுக்கொண்டார்.
சில மாதங்களுக்குப் பிறகு அவரது சபை சார்பில் நடந்த கூட்டம் ஒன்றில், ''நீ அனேக பார்வையற்றோருக்கு ஒளியாக இருப்பாய்; அனேக ஊமையருக்கு நீ பேச்சாக இருப்பாய்; அனேக முடவருக்கு நீ கால்களாக இருப்பாய்,'' என்று ஒரு தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டது.
இதைக்கேட்ட எலிசபெத், ''இதை ஆண்டவர் எனக்காகத் தான் உரைத்திருக்கிறார்,'' என்று கூறினார். அதன்பிறகு அவரது செயல்பாடுகளில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன.
ஏழைகள், வியாதியால் பாதிக்கப்பட்டோர், சிறைக்கைதிகள் ஆகியோர் மீது அவருக்கு மிகுந்த பரிவு ஏற்பட்டது. தனது குடும்பத்தில் சேர்ந்த பழைய ஆடைகள் மட்டுமின்றி அனேகரை சந்தித்து பழைய ஆடைகளை சேகரித்து ஏழைகளுக்கு வினியோகம் செய்தார். வியாதியஸ்தர்களை சந்தித்து ஆறுதலாக பேசி பைபிளிலிருந்து சில வேத பகுதிகளை வாசித்து
அவர்களுக்காக ஜெபித்தார். தனது வீட்டிலேயே ஞாயிறு பள்ளி ஊழியத்தை துவக்கினார். கல்வியறிவற்ற குழந்தைகளுக்கு எழுதவும் வாசிக்கவும் கற்றுக்கொடுத்தார். வேத சத்தியங்களைக் கற்றுக் கொடுத்து அவர்களை தேவனுடைய பிள்ளைகளாக மாற்றினார். சிறைகளில் உள்ள கைதிகளுக்கு நற்போதனை செய்தார்.
இங்கிலாந்து அரசி விக்டோரியா இவரது நற்பணியை பாராட்டி பெரும் நன்கொடை வழங்கினார். 1845ல் எலிசபெத் மரணமடைந்தார். அவர் செய்த சமூகப்பணியும் இறைப்பணியும் இன்றும் பேசப்படுகிறது.
தேவனுடைய வார்த்தை இதழிலிருந்து...