ADDED : மார் 04, 2011 09:29 AM

வீட்டை தினமும் சுத்தப்படுத்துகிறோம். பலவித கிருமிநாசினிகளை இட்டு, வீட்டைக் கழுவி நோய்கள் வராமல் தடுக்கிறோம். ஆனால், நாட்டுக்குள் லஞ்சம், ஊழல் என்னும் பேரழுக்கு சேர்ந்திருக்கிறது. இதை சுத்தப்படுத்த வழி தெரியாமல் திண்டாடுகிறோம். மாறி மாறி ஓட்டளித்தாலும், வருகிற ஆட்சியாளர்கள் எல்லாமே ஊழலில் ஊறிப்போகிறார்கள். அவர்களைப் பார்த்து அதிகாரிகளும் கொட்டமடிக்கிறார்கள். அப்பாவி ஜனங்களோ, வாழும் வழி தெரியாமல் தவிக்கிறார்கள்.
ஒரு பண்ணைக்காரனிடம் ராஜா ஒருவர் தன் மாட்டுப்பண்ணை பராமரிப்பை ஒப்படைத்தார். அங்கு ஆயிரத்துக்கும் அதிகமான மாடுகள் இருந்தன. பராமரிப்பு செலவுக்காக ஏராளமான பணத்தையும் கொடுத்தார். பண்ணைக்காரனோ பராமரிப்பு பணியைச் சரிவர கவனிக்காமல் பணத்தை மோசடி செய்து வந்தான். மாதாமாதம் சம்பளமும் வாங்கி விடுவான்.
ஒரு ஆண்டு கழித்து ராஜா அங்கு திடீர் சோதனைக்கு வந்தார். பண்ணையின் நிலையைப் பார்த்து கோபமும் வருத்தமும் அடைந்தார். பண்ணைக்காரனை அழைத்து, ''அடப்பாவி! இந்த அசுத்தமான இடத்தில் கறந்து வரும் பாலைத்தான் அரண்மனையில் நாங்கள் குடிக்கிறோமா! பால் செம்பைக் கூட சரியாகத் துலக்காமல் வைத்துள்ளாயே! உன்னை என்ன செய்கிறேன், பார்,''என்றதும், பண்ணைக்காரன் நடுங்கிவிட்டான்.
''மன்னா! சீக்கிரம் சரி செய்து விடுகிறேன்,'' என்றான். ராஜா ஒருவாரத்தில் சரிசெய்யச் சொல்லிவிட்டு போய்விட்டார்.
ஒரு வாரத்தில் அவ்விடத்தை சுத்தம் செய்வது என்பது நடக்காத காரியம் என்பதால், அந்தப் பணியாளன் அப்பகுதியில் ஓடிய கால்வாயில் இருந்து ஒரு துணைக் கால்வாயை வெட்டினான். பண்ணைக்குள் அதை வேகமாகப் பாய விட்டான். அழுக்கு அகன்றது.
இதேபோல், நம் தேசத்து அழுக்கை நீக்க ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து மீண்டும் வர வேண்டும். அவரது வருகையின் நாள் சமீபித்து விட்டதையே இன்றைய நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன. அவரே சுத்திகரிக்கிறவர்; தூய்மைப்படுத்துகிறவர். அவரது வருகைக்காக நாம் தினமும் ஜெபிப்போம்.
''பின்பு பளிங்குபோல தெளிவான ஜீவத்தண்ணீருள்ள சுத்தமான நதி தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனத்திலிருந்து புறப்பட்டு வருகிறதை எனக்கு காண்பித்தான்'' (வெளி22:1) என்ற வசனம் மூலம் அவரது வருகை உறுதிப்படுகிறது.
