ADDED : பிப் 18, 2011 10:35 AM

பிரசித்தி பெற்ற ஓவியர் ஒருவர், இயேசுவுடன் அவரது சீடர்கள் கடைசி பந்தியில் அமர்ந்திருந்த காட்சியை வரைந்தார். தன் நண்பர் ஒருவரிடம் அதைக்காட்டி, ''சித்திரம் எப்படி இருக்கிறது?'' என்றார். நண்பன் சிறிதுநேரம் படத்தை உற்றுப்பார்த்தார். ''கிறிஸ்துவின் கையிலுள்ள பாத்திரம் மிகவும் தத்ரூபமாக இருக்கிறது,'' என்றார். உடனே ஓவியர் பிரஷ்ஷை எடுத்தார். தண்ணீரில் தோய்த்து பாத்திரத்தை அழித்து விட்டார். ''ஏன் அழகான படத்தை இப்படி செய்தாய்?'' என நண்பர் கடிந்து கொண்டார். ''என் கிறிஸ்துவைக் காட்டிலும் வேறு எதுவும் இந்த சித்திரத்தில் தத்ரூபமாக இருப்பதை நான் விரும்பவில்லை. அனைவர் பார்வையும் அவர் மீது மட்டுமே பட வேண்டும். கிறிஸ்துவைப் பார்ப்பதில் இருந்து ஒருவனுடைய கவனத்தை தன் பக்கம் ஈர்க்கும் எந்தப் பொருளும் என் படத்தில் தேவையில்லை,'' என்றார் ஓவியர். ''எங்கள் முகத்தையல்ல, பார்க்கிறவர்கள் கர்த்தருடைய முகத்தையே காணட்டும். எங்கள் சுயசித்தம் வேண்டாம். எங்கள் விருப்பப்படி நடந்து திரிய வேண்டாம். கர்த்தரின் சித்தமே எங்களில் நிறைவேறட்டும் (ஏசாயா 6ம் அதிகாரம்) என்ற வசனத்தை இங்கே நினைவு கூர்வோம்.
