ADDED : நவ 24, 2015 09:22 AM

இங்கிலாந்தில் வசித்த ஒரு பெண், கவர்னரிடம் ஒரு விண்ணப்பம் கொடுத்தார். அதில், தங்கள் ஊரில் ஒரு அனாதை விடுதி கட்ட இடம் ஒதுக்கித் தர கோரியிருந்தார். கவர்னரோ இதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. இருப்பினும், கொடுத்த மனுவிற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக பாறைகள் நிறைந்த ஒரு குன்றுப்பகுதியை ஒதுக்கி, 'இதில் விடுதி கட்டிக் கொள்ளுங்கள்!' என சொல்லி விட்டார்.
இது தேவனின் செயல் என நம்பிய அப்பெண், அந்த இடத்திலுள்ள பாறைகளை உடைத்து, கட்டடம் கட்ட ஏற்படும் செலவை எண்ணிப் பார்த்தார். யோசிக்கும்போதே மலைப்பாக இருந்தது. ஆனாலும், அவர் கர்த்தர் மீது கொண்டிருந்த விசுவாசத்தால் அதைப் பற்றி
கவலைப்படவில்லை.
கர்த்தரிடம் தொடர்ந்து ஜெபித்தார். சில நாட்கள் தான் கழிந்திருக்கும். ஒரு கான்ட்ராக்டர் வந்தார். 'சகோதரி! நான் கடலில் ஒரு பாலம் கட்ட ஒப்பந்தம் செய்துள்ளேன். அதற்கு நிறைய கற்கள் தேவை. தங்கள் நிலத்திலுள்ள பாறைகளை உடைத்துக் கொள்ள அனுமதி தாருங்கள்! நீங்கள் கேட்கும் பணத்தை தருகிறேன்,'' என்றார்.
அந்தப் பெண் மகிழ்ந்தார். பாறைகள் உடைக்கப்பட்டன. ஒரு பெருந்தொகை அப்பெண்ணுக்கு தரப்பட்டது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல, செலவே இல்லாமல், சமதளமான நிலத்தில், தனக்கு கிடைத்த பெருந்தொகையைக் கொண்டு விடுதி கட்டினார் அந்தப்பெண்.
கர்த்தரிடம் வைக்கும் நம்பிக்கைக்கும், விசுவாசத்திற்கும் நிச்சயம் பலனுண்டு. பைபிளில், ''விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம்
பெற்றவன் ரட்சிக்கப்படுவான். விசுவாசியாகாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் (தண்டனைக்கு உள்ளாதல்) தீர்க்கப்படுவான்,'' என சொல்லப்பட்டுள்ளது. உண்மை தானே!