ADDED : மே 13, 2014 03:29 PM

''உண்மையான மகிழ்ச்சி எதில் இருக்கிறது?'' என ஒரு நண்பர் தனது சகாவிடம் கேட்டார்.
அவர்கள் இருவரும் ஒரே அலுவலகத்தில் பணிபுரிபவர்கள். அந்த அலுவலகத்தில் லஞ்ச லாவண்யம் அதிகம். கேள்வி கேட்ட நண்பர் ஏராளமாக லஞ்சம் வாங்குவார். இஷ்டம் போல் செலவழிப்பார். மனைவி, மக்களுக்கும் கொடுப்பார். அவர்களும் செலவழித்து மகிழ்ந்தார்கள். ஆனாலும், குற்ற மனசாட்சியும், குற்ற உணர்வும், என்றாவது மாட்டிக்கொள்வோமோ என்ற பயமும் அவரை ஆக்கிரமித்திருந்தது. இந்த சூழ்நிலையில் தனது நண்பரின் நடவடிக்கைகளை அவர் கவனித்தார். நண்பரோ, ஒரு காசுகூட யாரிடமும் கைநீட்டி வாங்க மாட்டார். அவரது முகம் எப்போதும் மலர்ச்சியுடன் இருக்கும். எதற்காகவும் கவலைப்பட மாட்டார். இந்த சூழ்நிலையில் தான், மேற்கண்ட கேள்வியைக் கேட்டார்.
''நண்பனே! லஞ்சம் வாங்குவதிலும், அதை செலவழிப்பதிலும் நிச்சயமாக மகிழ்ச்சி உண்டாகாது. எந்நேரமும் சிரித்த முகத்துடன் இருக்கவேண்டுமானால், ஆண்டவரின் நினைவு வேண்டும். அவரது நினைவு இருந்தால், அவர் நம்மை ஆனந்தம் என்னும் தைலத்தால் அபிஷேகம் பண்ணுவார். பணத்தாலோ, சினிமாவாலோ, கெட்ட நண்பர்களாலோ, பெண்ணாலோ, குடியினாலோ வரும் சந்தோஷம் தற்காலிகமானது. ஒழுக்கமான வாழ்க்கை நடத்துபவன், தேவாதிதேவனைப் போல சந்தோஷமாக இருக்கிறான். எனவே, இனியாவது லஞ்சம் வாங்காதே! உன் மனம் அமைதியடையும்,'' என்றார் நண்பர்.
முறையாக வாழும் வாழ்க்கையில் தான், மகிழ்ச்சி இருக்கிறது.