ADDED : ஜன 14, 2015 11:56 AM

இங்கிலாந்தைச் சேர்ந்த போதகர் ஜியார்ஜ் முல்லர், ஒரு கப்பலில் குவபெக் நகருக்கு சென்று கொண்டிருந்தார். குறிப்பிட்ட ஒரு நாளில் அந்த நகரை அடைய வேண்டிய கட்டாயம் அவருக்கு இருந்தது. ஆனால், பனி மூட்டத்தால் கப்பல் நிறுத்தப்பட்டது.
முல்லர் கேப்டனிடம்,''நீங்கள் கப்பலை கிளப்புங்கள். நான் சனிக்கிழமைக்குள் அங்கு இருந்தாக வேண்டும்,'' என்றார்.
கேப்டன் அவரிடம், ''கடலே உறைந்து போகும் அளவு குளிர் இருக்கிறது. எனவே நீங்கள் சொல்வது சாத்தியமில்லை,'' என்றார்.
முல்லர் அவரிடம்,''நான் 57 ஆண்டு காலமாக இந்த வழியில் பயணித்து கொண்டு இருக்கிறேன். ஒருபோதும் தடை வந்ததில்லை.
இப்போதும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அதற்குரிய வழியை உண்டாக்குவார்,''என்று சொல்லி கேப்டனுடன் ஒரு அறைக்குள் சென்று ஜெபிக்க ஆரம்பித்தார். கேப்டன் அவரிடம்,
''உங்கள் ஜெபத்தால் நேரம் தான் வீணாகும். பயன் இருக்காது,''என்றார்.
முல்லர் சற்றும் கவலைப்படாமல், ''எல்லா சுற்றுச்சூழல்களையும் தம்முடைய ஆளுகைக்குள் வைத்து நடத்தும், ஜீவனுள்ள ஆண்டவரை எனக்குத் தெரியும். நான் அவரை நம்பி ஜெபிக்கிறேன்,''என சொல்லிவிட்டு தொடர்ந்து ஜெபித்தார். சற்று நேரத்தில்
பனிமூட்டம் விலகியது. கேப்டன் ஆச்சரியப்பட்டார். கடவுளால் ஆகாதது ஏதுமில்லை.