ADDED : செப் 12, 2012 12:36 PM
நம் முன்னோர், பெற்றோர் பல பணிகளைச் செய்தார்கள். அவற்றில் சில வயது மூப்பு காரணமாகவோ, மரணம் காரணமாகவோ பாதியில் நிற்கலாம். அவற்றை செய்து முடிப்பது நம் கடமை.
லியனார்டோ டாவின்சி என்ற உலகப்பிரசித்தி பெற்ற ஓவியர் இருந்தார். அவரது ஓவியங்கள் கோடி ரூபாய் பெறுமானவை. அந்த திறமைசாலி ஒரு ஓவியத்தை மாதக்கணக்கில் திட்டமிட்டு அங்குலம் அங்குலமாக அழகாக வரைந்தார். பாதி வரைந்து விட்டு, தன் மாணவனை அழைத்து, மீதியை நீ முடி,'' என்றார்.
அவன் தயங்கினான்.
''ஐயா! புகழ்பெற்ற தங்கள் படத்தை நான் முடிப்பதாவது! அது நடக்காத ஒன்று,'' என்றான்.
''என்னை முன்மாதிரியாகக் கொண்டு, நீ இந்த படத்தை வரைந்து முடிக்க வேண்டும் என்ற எண்ணம் உன்னுள் எழவில்லையா?'' என்றார் டாவின்சி.
அந்த மாணவன் பதிலேதும் பேசாமல் அதை வரைந்து முடித்தான். சிறப்பாக அமைந்தது அந்தப் படம்.
உலகமக்களை பாவத்தில் இருந்து மீட்க முன்கூட்டியே திட்டமிட்டு பூமிக்கு வந்தார் இயேசு.
தன் பணியை சிலுவையில் நிறைவேற்றி, மீதமுள்ளவைகளை நம் கையில் தந்திருக்கிறார். அவர் செய்த தியாகம், போதனை நம் உள்ளத்தையும் ஊக்குவிக்க வேண்டும்.
''ஆகையால், நீங்கள் புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி...உபதேசம் பண்ணுங்கள்'' (மத்.28:19,20) என்ற வசனத்தை நினைவில் கொண்டு, கர்த்தர் நமக்குத் தந்துள்ள பணிகளைத் தொடர்ந்துசெய்ய வேண்டும்.