ADDED : டிச 31, 2010 03:33 PM
ராவணனின் மகன் இந்திரஜித். அவனுக்கு ராவணன் இட்டபெயர் மேகநாதன். காரணம், சிறுகுழந்தையாக இருந்தபோதே கருக்கொண்ட மேகம் வானில் எப்படி இடித்துக் கொண்டு குமுறுமோ அப்படி கர்ஜனை செய்தானாம். எதற்கும் அஞ்சாத அரக்கர்களே அவனது கர்ஜனை கேட்டு ஒருகணம் நடுங்கிப் போனார்களாம். இவன் தேவலோகம் சென்று இந்திரனை வென்று அவனுடைய வில்லைக் கைப்பற்றினான். அதனால் 'இந்திரஜித்' என்னும் பெயர் பெற்றான். 'இந்திரனை வென்றவன்' என்பது இதன் பொருள். இவன் சிவபெருமானை நோக்கி தவம் செய்து, எல்லாவுலகங்களுக்கும் சென்று வரும் தேரையும், யார் கண்ணிலும் படாமல் யுத்தம் செய்யும் வலிமையும் பெற்றான். வானரவீரர்களை நாகாஸ்திரத்தின் மூலம் மூன்றுமுறை மூர்ச்சை அடையச் செய்தான். அனுமன் முதன்முதலில் இலங்கை வந்தபோது, தன்னுடைய பிரம்மாஸ்திரத்தால் அவரைக்கட்டி அரண்மனைக்கு இழுத்து வந்தான். ஆனாலும், அநியாயத்துக்கு பிரம்மாஸ்திரம் துணை போகவில்லை. பிரம்மாஸ்திரத்தால் கட்டப்பட்ட ஒருவனை பிற கயிறுகளைக் கொண்டு கட்டினால் பிரம்மாஸ்திர கட்டு அவிழ்ந்து விடும் என்பதை உணராத அசுரர்கள், அவரை பிற கயிறுகளாலும் கட்ட பிரம்மாஸ்திர கட்டு அவிழ்ந்தது. உடனே அனுமன் தப்பித்து விட்டார்.
