
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நுாறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா!
உன் சேவடி செவ்வி திருக்காப்பு
அடியோமோடும் நின்னோடும்
பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின் வலமார்பினில்
வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்துறையும்
சுடராழியும் பல்லாண்டு
படைபோர் புக்கு முழங்கும்
அப்பாஞ்ச சன்னியமும் பல்லாண்டே
வாழாட்பட்டு நின்றீருள்ளீரேல்
வந்து மண்ணும் மணமும் கொண்மின்
கூழாட்பட்டு நின்றீர்களை
எங்கள் குழுவினில் புகுதலொட்டோம்
ஏழாட்காலும் பழிப்பிலோம்
நாங்கள் இராக்கதர் வாழ் இலங்கை
பாழாளாகப் படை பொருதானுக்குப்
பல்லாண்டு கூறுதுமே
ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம் வந்து
எங்கள் குழாம் புகுந்து
கூடு மனமுடையீர்கள் வரம்பொழி
வந்து ஒல்லைக் கூடுமினோ
நாடும் நகரமும் நன்கறிய
நமோ நாராயணாய வென்று
பாடு மனமுடைப் பத்தருள்ளீர்
வந்து பல்லாண்டு கூறுமினே
அண்டக் குலத்துக்குக் கதிபதியாகி
அசுரர் இராக்கதரை
இண்டைக் குலத்தை எடுத்துக் களைந்த
இருடீகேசன் தனக்கு
தொண்டக் குலத்திலுள்ளீர்
வந்தடிதொழுது ஆயிர நாமம் சொல்லிப்
பண்டைக் குலத்தைத் தவிர்ந்து
பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்மினே
எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன்
ஏழ்படிகால் தொடங்கி
வந்து வழிவழி ஆட்செய்கின்றோம்
திருவோணத் திருவிழவில்
அந்தியம் போதிலரியுருவாகி
அரியை அழித்தவனைப்
பந்தனை தீரப் பல்லாண்டு
பல்லாயிரத்தாண்டென்று பாடுதமே
தீயில் பொலிகின்ற செஞ்சுடராழி
திகழ் திருச்சக்கரத்தின்
கோயில் பொறியாலே ஒற்றுண்டு நின்று
குடிகுடி ஆட்செய்கின்றோம்
மாயப் பொருபடை வாணனை
ஆயிரந்தோளும் பொழி குருதிபாயச்
சுழற்றிய ஆழி வல்லானுக்குப்
பல்லாண்டு கூறுதுமே
நெய்யிடை நல்லதோர் சோறும்
நியதமும் அத்தாணிச் சேவகமும்
கையடைக்காயும் கழுத்துக்குப் பூணொடு
காதுக்குக் குண்டலமும்
மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்து
என்னை வெள்ளுயிராக்கவல்ல
பையுடை நாகப்பகைக் கொடியானுக்குப்
பல்லாண்டு கூறுவனே
உடுத்துக் களைந்த நின் பீதக ஆடை
உடுத்து கலத்ததுண்டு
தொடுத்த துழாய் மலர்சூடிக் களைந்தன
சூடும் இத்தொண்டர்களோம்
விடுத்த திசைக் கருமம் திருத்தித்
திருவோணத் திருவிழவில்
படுத்த பைந்நாகணைப் பள்ளி
கொண்டானுக்குப் பல்லாண்டு கூறுதுமே
எந்நாள் எம்பெருமான் உன்தனக்கு
அடியோம் என்று எழுத்துப்பட்ட
அந்நாளே அடியோங்கள் அடிக்குடில்
வீடுபெற்று உய்ந்தது காண்
செந்நாள் தோற்றித் திரு மதுரையுள்
சிலை குனித்து ஐந்தலைய
பைந்நாகத் தலைப் பாய்ந்தவனே
உன்னைப் பல்லாண்டு கூறுதுமே
அல்வழக்கு ஒன்றுமில்லா
அணி கோட்டியர்கோன் அபிமானதுங்கன்
செல்வனைப் போல திருமாலே
நானும் உனக்குப் பழவடியேன்
நல் வகையால் நமோ நாராயணா
என்று நாமம் பல பரவி
பல் வகையாலும் பவித்திரனே
உன்னைப் பல்லாண்டு கூறுவனே
பல்லாண்டு என்று பவித்திரனைப்
பரமேட்டியைச் சார்ங்கமென்னும்
வில்லாண்டான் தன்னை வில்லிபுத்துார்
விட்டுசித்தன் விரும்பியசொல்
நல்லாண்டென்று நவின்று
உரைப்பார் நமோ நாராயணாய என்று
பல்லாண்டும் பரமாத்மனைச்
சூழ்ந்திருந்தேத்துவர் பல்லாண்டே.