
நரசிம்மர், கருடன், பெரியாழ்வார் மூவருக்குரிய நட்சத்திரம் சுவாதி.
ஸ்ரீவில்லிபுத்துாரிலில் ஆனி மாதம் சுவாதியன்று பிறந்தவர் பெரியாழ்வார்.
பெருமாளின் அடியவர்களான பன்னிரு ஆழ்வார்களில் இவரும் ஒருவர்.
ஆழ்வார்களில் 'பெருமாளின் திருமுகம்' என இவரை வர்ணிப்பர்.
எப்போதும் பெருமாளை தன் சித்தத்தில் நினைத்ததாலும், பெருமாளின் எண்ணத்தில் இவர் இருந்ததாலும் 'விஷ்ணு சித்தர்' என இவருக்கு பெயர் வந்தது. இவரே ஆண்டாளின் அப்பா. திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு ஆண்டாளை மணம் செய்து கொடுத்ததால் 'பெண் கொடுத்த மாமனார்' என்ற சிறப்பை பெற்றார்.
ஸ்ரீவில்லிபுத்துார் வடபத்ரசாயி கோயிலின் திருப்பணிக்காக, பெருமாளின் உத்தரவுப்படி மதுரைக்கு வந்தார். வல்லபதேவ பாண்டிய மன்னனின் சந்தேகத்தை வேத, ஆகம, புராண, உபநிடத சாஸ்திரங்களை கொண்டு பரம்பொருள் 'ஸ்ரீமன்நாராயணனே' என நிரூபித்தார்.
அப்போது பொற்கிழி தானாக வளைந்து இவர் கையில் வந்து விழுந்தது. மகிழ்ச்சி அடைந்த மன்னர் இவரை யானையின் மீது ஏற்றி வீதி வலம் வரச் செய்தார்.
அதைப் பார்க்க பெருமாளே கருட வாகனத்தில் எழுந்தருளினார்.
அப்போது பெருமாளுக்கு திருஷ்டி பட்டு விடுமே என நினைத்து தாயுள்ளம் கொண்ட பெரியாழ்வார் பாடிய பாசுரமே பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு... என்பதாகும்.
* இதுவே நாலாயிர திவ்ய பிரபந்தத்தின் முதல் பாசுரம்.
* பெருமாளுக்கு எப்படி பன்னிரு நாமங்கள் சிறப்பானதோ அது போல இப்பாசுரமும் பன்னிரு பாடல்களை கொண்டது.
* இதில் ஸ்ரீவைகுண்டம், பெருமாள், திருவோண நட்சத்திர சிறப்பு, எட்டெழுத்து மந்திரத்தை பக்தர்களுக்கு உபதேசம் செய்கிறார் பெரியாழ்வார்.
* இதுவே, 'ஓம்' என்னும் பிரணவத்தை விவரிக்கும் பாசுரம் என்பார் நாதமுனிகள்.
* கோயில்களில் பெருமாளுக்கு நடைபெறும் அபிஷேக காலத்தில் இப்பாசுரம் படிக்கப்படுவதால் இதற்கு 'நீராட்டுப் பாசுரம்' என்று பெயர்.
* பெருமாள் கோயில்களில் காலை மாலையில் பக்தர்களால் இது பாடப்படுகிறது.
* இப்பாசுரத்தை மனமுருகி பாடினால் நினைத்தது எல்லாம் கைகூடும். தினமும் பெருமாளின் அருள் கிடைக்கும்.
* பெருமாள் அன்று மட்டும் அல்ல... தன் திருவடியை சிக்கெனப் பிடித்தவர்களுக்கு இன்றும் பொன்னும், பொருளும், புகழும் கொடுப்பார் என்றால் அது மிகையல்ல... உண்மை தானே.
* 'பரத்துவ நிர்ணயம்' நடந்த இந்த இடத்தை 'மெய் காட்டும் பொட்டல்' என இலக்கியங்கள் புகழும். ஆண்டுதோறும் மார்கழி அமாவாசை அன்று 'பரத்துவ நிர்ணயம்' விழா நடக்கிறது. ஸ்ரீபெரியாழ்வார் திருவடிகளே சரணம்.
வில்லாண்ட வடவரையான் மணம்
புணர அட்டாங்க விமானம் என்னும்
இல்லாண்டு புயன் கனகன் காசிபனார்
பிருகு அம்பரீடன் கூடல்
தொல்லாண்ட புருரவசு மலயகேதனன்
முதலோர் தொழப்புத்துாரான்
பல்லாண்டு பாடவந்த மல்லாண்ட
தோளன் அடி பணிதல் செய்வாம்.

