
கு.விஸ்வா, வில்லிவாக்கம், சென்னை: சிவனுக்கு ஏற்ற கிழமை எது?
திங்கள். நிலாவை சூடியதால் சிவனை 'சோமன்' என்பர். இதனால்தான் திங்கட்கிழமையை 'சோம வாரம்' என்கிறோம்.
வி.சுகுமார், எழுமலை, மதுரை: சிவலிங்கத்திற்கு ஊமத்தம்பூ சாத்தலாமா?
சாத்தலாம். சிவனுக்கு விருப்பமான இதை 'பொன்பொதி மத்தமாலை' என்கிறது தேவார பாடல்.
எம்.அருள், அய்யாத்தோப்பு, கன்னியாகுமரி: கும்பாபிஷேகத்தன்று வழிபட்டால்...
உலக நன்மைக்கான வழிபாடு கும்பாபிஷேகம். முப்பத்து முக்கோடி தேவர்களும் இதில் பங்கேற்பதால் பலன் அதிகம்.
மு.திருப்பதி, இடையர்பாளையம், புதுச்சேரி: பூஜையின் போது குடத்திற்கு நுால் சுற்றுவது ஏன்?
தெய்வத்தின் திருமேனி (உடல்) குடம். உடலில் உள்ள நரம்பாக கருதி நுால் சுற்றுகிறோம்.
பி.சதீஷ், சிங்காநல்லுார், கோயம்புத்துார்: யாத்திரை செல்வதன் நோக்கம்...
பாவம் தீரும். தெய்வ பக்தி, நாட்டுப்பற்று, மனிதநேயம் உண்டாகும்.
ரா.ஆதித்யா, திண்டிவனம், விழுப்புரம்: திருமணமான பெண், தன் பெற்றோருக்காக அமாவாசை விரதம் இருக்கலாமா?
மணமான பிறகு பெற்றோர் ஸ்தானத்தில் மாமனார், மாமியார் இருப்பதால் கூடாது. அவர்கள் இல்லாத பட்சத்தில் கணவருடன் சேர்ந்து இருக்கலாம்.
ரா.இசக்கி, கோவில்பட்டி, துாத்துக்குடி: காரணமின்றி மற்றவர் மீது கோபம் வருகிறது. என்ன செய்யலாம்?
எல்லாம் கடவுளின் செயல் என நம்புங்கள். தினமும் கோயிலுக்குச் செல்லுங்கள். அனைவரும் நல்லவராக உங்களுக்கு தெரிவார்கள்.
பி.அழகுராஜ், ஆண்டிபட்டி, தேனி: எமதர்மனை வழிபடலாமா... கோயில் எங்குள்ளது?
மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம், திருக்கடையூர், திருவாரூர் மாவட்டம் ஸ்ரீவாஞ்சியம் கோயில்களில் எமனுக்கு சன்னதி உள்ளது. சனிக்கிழமையில் வழிபட்டால் ஆயுள் பெருகும்.
சே.கோமல், ஹலசூரு, பெங்களூரு: தலையில் காகம் கொத்தியதற்கு பரிகாரம் உண்டா...
குளித்து விட்டு சனீஸ்வரர் சன்னதியில் விளக்கு ஏற்றுங்கள்.