ADDED : ஆக 02, 2010 12:33 PM

ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதப்பெருமாள் பாம்பணையில் துயில் கொண்டிருப்பதால் தேங்காய் உடைக்கும் வழக்கம் இல்லை. தேங்காய் உடைக்கும் சப்தம் கேட்டு பெருமாளின் அறிதுயில் (உலகத்தில் நடக்கும் எல்லாவற்றையும் அறிந்தபடியே உறங்குதல்) கலைந்துவிடக்கூடாது என்பதால் தேங்காயைத் துருவலாகப் படைக்கிறார்கள்.
மாவிலை கட்டுங்க!
வீட்டில் நிலைப்படியில் மகாலட்சுமி இருப்பதாக ஐதீகம். அதனால் தலைவாசலில் மங்கலகரமாக மாவிலைத் தோரணம் கட்டுவர். இதற்கான காரணம் ஒன்றுஉண்டு. வீட்டில் 'வாக்தேவதை' என்றொரு தேவதை நம்மைச் சுற்றிக் கொண்டே இருக்கும். நாம் எந்த வார்த்தை சொன்னாலும் அத்தேவதை 'அப்படியே ஆகட்டும்' என்று சொல்லிக் கொண்டிருக்கும். நன்மை தரும் சுபவார்த்தைகளைச் சொன்னால் அவ்வீட்டில் வாக்தேவதையும் 'அப்படியே ஆகட்டும்' என்று ஆசிர்வதிக்கும். அசுபமான கெடுவார்த்தைகளைச் சொன்னால் அதையும் 'அப்படியே ஆகட்டும்' என்று சொல்லிவிடும். ஆனால், மாவிலைத் தோரணம் கட்டியிருக்கும் வீட்டில் அசுபமான வார்த்தைகளைக் கேட்டால் மாவிலை காற்றில் அசைந்து அவ்வார்த்தையின் பலனை வெளியேற்றி விடும்.
கால் மண்டபங்கள்
பெரிய கோயில்களில் அர்த்தமண்டபம், மகாமண்டபம் பிரதானமாக அமைந்திருக்கும். மண்டபம் முழுவதும் சிற்பவேலைப்பாடுகள் நிறைந்த கல்தூண்கள் அமைந்துள்ள மண்டபத்தை 'கால் மண்டபங்கள்' என்பர். நூறு கல்தூண்கள் இருந்தால் நூற்றுக்கால் மண்டபம் என்றும், ஆயிரம் கல்தூண்கள் இருந்தால் ஆயிரங்கால் மண்டபம் என்றும் அழைக்கப்படும். திருவண்ணாமலை, சிதம்பரம், திருவானைக்காவல் (திருச்சி அருகில்), ஸ்ரீரங்கம், திருவாரூர், திருவக்கரை (விழுப்புரம் மாவட்டம்), காஞ்சிபுரம், மதுரை, திருநெல்வேலி, குடுமியான்மலை தலங்களில் ஆயிரங்கால் மண்டபங்கள் அமைந்துள்ளன.