ADDED : அக் 15, 2010 04:47 PM

துவாரகையில் கிருஷ்ணரின் மகன் சாம்பன் வசித்து வந்தான். அவனும், அவனது நண்பர்களும் பிறரை பரிகாசம் செய்வதில் கெட்டிக்காரர்கள். ஒருமுறை சாம்பனின் வயிற்றில் துணிக்கட்டு ஒன்றை வைத்து, பெண் போல வேஷமிட்டு, தங்கள் ஊரில் இருந்த 'பிண்டாரகம்' என்ற தீர்த்தக்கரைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு விஸ்வாமித்திரர், கண்வர் போன்ற முக்கிய ரிஷிகள் தவத்தில் இருந்தனர். இளைஞர்கள் அந்தப்பக்கமாகச் சென்றார்கள். ரிஷிகளை கேலி செய்ய எண்ணி, ''மகரிஷிகளே! இந்தப் பெண் கர்ப்பமாயிருக்கிறாள். இவளுக்கு என்ன குழந்தை பிறக்கும்? சொல்லுங்கள்,'' என்றார்கள். ரிஷிகள் ஆணோ, பெண்ணோ என சொல்வார்கள். அப்போது, வயிற்றுக்கட்டை அவிழ்த்துக்காட்டி அவர்களைக் கேலி செய்ய வேண்டும் என்பது அவர்களது திட்டம். எல்லாம் அறிந்த ரிஷிகள்,''அடேய்! இவன் கிருஷ்ணன் மகன் சாம்பன் என நாங்கள் அறிவோம். எங்களைக் கேலி செய்யத் துணிந்தீர்கள் அல்லவா! இவன் வயிற்றில் உலக்கை பிறக்கும். அது உங்கள் வம்சத்தையே அழிக்கும்,'' என்று சாபமிட்டனர். அதுபோல உலக்கை உருவானது. அதை யாதவ வம்சத்தினர் அரைத்து கடலில் கலந்தனர். கரைத்த துகள்கள் ஒன்றுகூடி புற்களாக கடற்கரையில் முளைத்தன. அவற்றைக் கொண்டு பிற்காலத்தில் யாதவர்கள் சண்டையிட, அவை பெரிய பெரிய உலக்கைகளாக மாறி அவர்களை அழித்தன. பெரியவர்களைக் கேலி செய்வது பெரும்பாவம்.