ADDED : ஜன 15, 2011 12:43 AM

தை மாதத்தில் சூரியனார்கோயிலுக்குச் சென்று வருவது, மிகுந்த பலனைத் தரும். இம்மாதத்தில் வரும் ரதசப்தமி முக்கியநாளாக இங்கு சென்று வர மிகவும் உகந்த நாள். சூரியனார்கோயில் வழிபாடு மற்ற கோயில்களுக்குச் சென்று வருவது போல் அல்ல! இது ஒரு முழுமையான நவக்கிரகக் கோயில் என்பதால் வழிபாட்டு முறை மாறுபடும். முதலில் கோயில் முன்புள்ள சூரிய புஷ்கரணி தீர்த்தத்தில் உள்ள தண்ணீரை தலையில் தெளித்துக் கொள்ள வேண்டும். ராஜகோபுரம் முன்பு நின்று, தலைமேல் கை குவித்து வணங்கிக் கோபுர தரிசனம் செய்ய வேண்டும். பின்னர் கோபுர வாசல் வழியே நுழைந்து, தெற்கு பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் உள்ள கோள்தீர்த்த விநாயகர் சந்நிதிக்குச் சென்று உங்கள் குடும்பத்தார் பெயர், நட்சத்திரத்துக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். பின்பு, இந்த சந்நிதியின் வடகிழக்கிலுள்ள நர்த்தன மண்டப படிக்கட்டுகளில் ஏறி, மண்டபத்தைத் தாண்டி சபாநாயகர் மண்டபத்தை அடைய வேண்டும். அங்கே நவக்கிரக உற்சவ மூர்த்திகளை தரிசனம் செய்யவேண்டும்.
அந்த மண்டபத்தைக் கடந்து ஸ்தபன மண்டபம் செல்ல வேண்டும். அங்குள்ள காசி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மையைத் தரிசனம் செய்ய வேண்டும். ஸ்தபன மண்பத்தைத் தாண்டி மகாமண்டபமான குரு மண்டபத்தை அடைய வேண்டும். பிறகு, அர்த்தமண்டப நுழைவு வாயிலுக்கு வெளியே சூரியபகவான் சந்நிதி சென்று, அங்கும் அர்ச்சனை செய்ய வேண்டும். இந்த அர்ச்சனை முடிந்த பிறகு, திரும்பி நின்று, நம் பார்வையில் படும் குரு பகவானை வழிபட வேண்டும். பிறகு, தென்புறத்திலுள்ள கர்ண துவார வாயில் வழியாக இறங்கி, சூரியனார் சந்நிதியை ஒட்டிச்செல்லும் வழியில் சென்று சனீஸ்வரர், புதன், அங்காரகன் (செவ்வாய்) சந்நிதிகளுக்குச் சென்று அவர்களை வழிபட வேண்டும். பிறகு வடக்காகச் சென்று சந்திரன், கேதுவைத் தரிசிக்க வேண்டும். பின்பு மேற்காகத் திரும்பிச் சென்று சுக்கிரனையும், ராகுவையும் தரிசிக்க வேண்டும். கடைசியில், தேஜஸ் சண்டேஸ்வரரை வணங்க வேண்டும். சூரியனார் கருவறையை ஒட்டி, முன்பு சென்ற வழியாகவே திரும்பி வந்து சனீஸ்வரர் கோயிலைத் தாண்டி தெற்கு பிரகாரத்தில் சேர வேண்டும். மீண்டும் மேற்கு நோக்கிச் சென்று கோள்தீர்த்த விநாயகரை வணங்க @வண்டும்.
