ADDED : ஆக 17, 2018 02:49 PM

கே.லட்சுமி, விழுப்புரம்: திருமணம் நடத்த ஏற்ற மாதங்கள் எவை?
ஆடி, புரட்டாசி, மார்கழி, மாசியில் திருமணம் நடத்தக் கூடாது. மற்ற மாதங்களில் நடத்தலாம்.
ஆர்.பாலிகா, காஞ்சிபுரம்: குழந்தைகளுக்கு எவ்வளவு நாள் திருஷ்டி சுற்ற வேண்டும்?
குழந்தை பிறந்து தீட்டு கழிக்க நடத்தும் சடங்கு வரை திருஷ்டி சுற்றக் கூடாது. ஆரத்தி கரைத்து அதில் வேப்பிலை இட்டு வைக்கலாம். அதன் பின் செவ்வாய், வெள்ளியன்று திருஷ்டி சுற்றலாம். இதற்கு கால வரையறை கிடையாது.
பா.பிரதாப், கடலுார்: பேச்சு, எழுத்துத்துறையில் சாதிக்க யாரை வணங்க வேண்டும்?
மாதந்தோறும் கார்த்திகை நட்சத்திரத்தன்று விரதம் இருந்து முருகனை வழிபட எண்ணம் நிறைவேறும்.
ஏ.மூர்த்தி, திருவள்ளூர்: நாக தோஷத்திற்கு என்ன பரிகாரம் செய்யலாம்?
ஞாயிறன்று ராகு காலமான மாலை 4:30- 6:00 மணி அல்லது செவ்வாயன்று மதியம் 3:00 - மாலை 4:30 மணிக்குள் துர்க்கையை வழிபட நாக தோஷம் நீங்கும்.
ராஜிவன், ராஜபாளையம்: புனித தீர்த்தமான கங்கை நீரை என்ன செய்யலாம்?
கங்கை, யமுனை போன்ற தீர்த்தங்களை பூஜையறையில் வைத்து வழிபடலாம். கூடுதலாக தீர்த்தம் இருந்தால் கோயிலில் அபிஷேகத்திற்கு கொடுக்கலாம்.
எஸ்.மைதிலி, அச்சிறுபாக்கம்: திருமணத்தில் மணமக்கள் கையில் காப்புக்கட்டுவது ஏன்?
திருமணத்திற்கு தடங்கல் வராமல் இருக்க மணமக்களுக்கு காப்புக்கட்டுகின்றனர். இது அவர்களை கவசமாக பாதுகாக்கும்.
