ADDED : செப் 07, 2018 03:19 PM

* எதிர்மறை எண்ணத்தை தவிர்க்க என்ன செய்யலாம்?
ஜே.ஆர்.ராஜாராம், பரமக்குடி
வைரஸ் தாக்கிய கம்ப்யூட்டர் நம் கட்டுப்பாட்டில் இருக்காது. அதற்கு 'ஆன்ட்டி வைரஸ் சாப்ட்வேர்' பயன்படுத்தினால் அது நம் கட்டளைகளை ஏற்று செயல்படும். அது போல நம்மைச் சுற்றி நிகழ்வதில் எல்லாம் மனம் ஈடுபட்டால், முறை தவறி செயல்படும். கடவுளின் திருநாமத்தை உச்சரிப்பதே ஒரே வழி. தட்சிணாமூர்த்தி, ஹயக்ரீவரை வழிபட்டால் எதிர்மறை எண்ணம் மறையும்.
சிவலிங்கத்திற்கும் நந்தீஸ்வரருக்கும் இடையில் செல்லக் கூடாதா...
கோ.குப்புசுவாமி, சென்னை
சிவலிங்கத்தை தரிசித்தபடி, நந்தீஸ்வரர் மூச்சுக்காற்றால் சாமரம் வீசி வழிபடுவதால் யாரும் குறுக்கே செல்லக் கூடாது.
கோயிலில் ஈரத்துணியுடன் வழிபடலாமா?
ஆர்.சிவசுப்பிரமணியன் உடுமலைப்பேட்டை
வழிபாடு உட்பட எந்த சுபவிஷயத்திற்கும் ஈரத்துணியுடன் செல்லக் கூடாது.
பெற்றோரின் பாவம் பிள்ளைகளைச் சேருமா?
பாப்பா, உளுந்துார்பேட்டை
ஒருவர் செய்த பாவ, புண்ணியம் மறுபிறவியில் அவரையும், அவரது குடும்பத்தினரையும் சேரும்.
* உறவினருடன் இணக்கமாக இருக்க வழி சொல்லுங்கள்
என்.ஷீரின், கடலுார்
பிறரது மனம் நோகும்படி நடக்காதீர்கள். உறவினரால் புண்படுத்தப்பட்டாலும் பொறுமையாக இருங்கள். காலம் தான் அதற்கு சிறந்த மருந்து.
விரதம், உபவாசம் இரண்டும் ஒன்றா..
அ.கிருஷ்ணசாமி, திருப்பூர்
இல்லை. விரத நாளில் காலை, இரவில் பாலும் பழமும், மதியம் உணவும் சாப்பிடலாம். உபவாச நாளில் திரவ உணவு மட்டுமே எடுத்துக் கொள்ளலாம்.
ராகு, கேதுவுக்காக நவக்கிரகத்தை வலமிருந்து இடமாக சுற்றுகிறார்களே...
இ.நாகராஜன், சாத்துார்
கூடாது. ராகு, கேதுவை மட்டும் எப்படி தனியாக சுற்ற முடியும்? முன்னோருக்கான சடங்கில் மட்டும் வலமிருந்து இடமாக சுற்ற வேண்டும்.
கோலமிடும் போது உதிரிப்பூக்கள், குங்குமம் வைப்பது சரிதானா?
ஜே.ஆர்.சர்மிளா, பரமக்குடி
காலில் மிதிபடாத இடங்களில் மட்டும் பூக்களால் அழகுபடுத்தலாம். மற்ற இடங்களில் கோலத்துடன் காவிப்பொடியை பயன்படுத்தலாம்.
