
* பூஜையில் உபயதாரருக்கு பரிவட்டம் கட்டுவது ஏன்?
ஏ.மல்லிகா, சென்னை
சிறப்பு பூஜைக்குரிய செலவை ஏற்பவரே பூஜைக்குரிய எஜமானர் என்பதால் அவருக்கு மரியாதையுடன் பிரசாதம் அர்ச்சகர் மூலம் வழங்குவது மரபு. அதற்காக சுவாமியின் முன்னிலையில் பரிவட்டம் கட்டி மாலை அணிவிக்கப்படுகிறது.
துாங்கி எழுந்ததும் பார்க்க வேண்டியவை எவை?
இரா.ரங்கசாமி, வடுகப்பட்டி
எழுந்ததும் கைகளை விரித்தபடி அருகருகே வைத்துப் பார்த்தால் பார்வதி, லட்சுமி, சரஸ்வதியை தரிசித்த பலன் கிடைக்கும். அதன்பின் கைகள், கால்கள் கழுவி, திருநீறு பூசி பின் சுவாமி படங்கள், பசுமாட்டை பார்ப்பது நல்லது.
* திருமணமாகி குழந்தை பெற்ற ஆண் அல்லது பெண்ணை தத்து எடுக்கலாமா?
எஸ்.திருமலை, கோவை.
விபரம் அறியாத குழந்தையை தத்து எடுத்து வளர்க்க வேண்டும். திருமணமானவர்களை ஏற்பதற்கு சுவீகாரம் என பெயர். சொல்லில் தான் வேறுபாடே தவிர எந்த வயதிலும் யாரையும் தத்து எடுக்கலாம்.
ராக்காயி, கருப்புசாமி போன்ற கிராம தெய்வங்களை வழிபட்டால் பலன் கிடைக்குமா?
ஆ.குலோத்துங்கசோழன், சிதம்பரம்.
பலன் கிடைக்கும். கடவுளுக்கு என்று தனி பெயரோ, வடிவமோ கிடையாது. எப்படி வழிபட்டாலும் கடவுள் ஒருவரே. இதை அர்ஜுனனுக்கு தெளிவுபட கிருஷ்ணர் பகவத் கீதையில் உபதேசித்துள்ளார்.
தெய்வ பெயர்கள் (நாராயணா,ராமா,முருகா,சிவசிவ) பொறித்த துண்டை இடுப்பில் கட்டலாமா?
பி.சடகோபன், சென்னை
கோயில், வீட்டு வழிபாட்டு நேரத்தில் மட்டும் உடுத்தலாம். மற்ற நேரங்களில் தவிர்ப்பது அவசியம்.
கர்ப்பிணிகள் ஜபிக்க தனி ஸ்லோகம் இருக்கிறதா?
ஜி.கண்ணாத்தாள், திருச்சுழி
கருவில் இருக்கும் குழந்தை நல்லறிவுடன் பிறக்க, தாய் ஆன்மிகக் கதைகளை கேட்டு, படித்து வருவது நல்லது. திருக்கருகாவூர் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகையை வழிபட்டு ''ஓம் ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகாயை நமஹ'' என தினமும் 108 முறை ஜபிக்க சுகப்பிரசவம் உண்டாகும்.
கலைத்துறையில் சிறந்து விளங்க என்ன செய்ய வேண்டும்?
எம்.அனுராதா, கோவை
நடனம், நடிப்புத்துறைக்கு நடராஜர், பேச்சுத்துறைக்கு சரஸ்வதி, எழுத்துத்துறைக்கு முருகப்பெருமானை வழிபட வேண்டும். இத்துடன் பயிற்சியில் ஈடுபடுவது மிக அவசியம்.
எந்த திசையில் தலை வைத்துத் துாங்குவது நல்லது?
பி.வி.மோகன், மானாமதுரை
வசிக்கும் ஊரில் கிழக்கிலும், வெளியூரில் மேற்கிலும் தலை வைத்துத் துாங்குவது சிறப்பு. தெற்கில் தலை வைத்தால் தவறு கிடையாது. வடக்கை தவிர்ப்பது அவசியம்.

