ADDED : ஜூன் 09, 2019 10:06 AM

நவக்கிரகங்களை எப்போது வழிபடலாம்?
டி.மகாலட்சுமி, ஆவடி
முதலில் விநாயகரை வழிபட்ட பிறகு சுவாமி, அம்மன் சன்னதியை தரிசிக்க வேண்டும். பின்னர் பிற தெய்வங்களை வழிபட்டு கடைசியாக நவக்கிரகங்களை வழிபட வேண்டும்.
* கொடியவர்களை கடவுள் மன்னிப்பாரா?
ஆர். வெங்கட்ராமன், ஊரப்பாக்கம்.
எத்தனையோ அசுரர்களை, மன்னித்து கடவுள் ஏற்றுக் கொள்ளவில்லையா? அதே போல் அசுரனான சூரபத்மனை கொல்லாமல், மயில் வாகனம், சேவல் கொடியாக முருகப்பெருமான் ஏற்றதையே 'சூரசம்ஹாரம்' என நாம் கொண்டாடவில்லையா. கொடியவர் என்றாலும் அவருக்குள்ளும் கடவுளின் அம்சமான 'ஆன்மா' இருக்கே!
கங்கையில் நீராடினால் பாவம் தீருமா?
என்.ஜெ.தீபிகா, திருப்பூர்
மனம் திருந்தியவர்கள் காசியில் தங்கி, கங்கையில் நீராடி, விஸ்வநாதரை தரிசிக்க பாவம் தீரும். ஆனால், மனம் அறிந்து பாவம் செய்தவர்கள் கங்கையில் நீராடினாலும், அதற்குரிய தண்டனையை அனுபவிக்க வேண்டும்.
* புனுகுக்காப்பு என்றால் என்ன?
ஏ.வடிவேல், செஞ்சி
புனுகுப்பூனை என்றொரு இனம் உண்டு. அதனிடம் பெறப்படும் வாசனைப்பொருளே புனுகு. முருகன், சட்டநாதர், பைரவருக்கு அர்ச்சனை செய்யும் போது புனுகுக்காப்பை சாத்தி வழிபடுவர். விருப்பம் நிறைவேற இதை நேர்த்திக்கடனாகவும் செய்வர்.
சாம்பிராணி புகையால் சிரமப்படுகிறேன். இதனை பூஜையில் தவிர்க்கலாமா?
ஜோ. ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை
பூஜைக்கு விளக்கேற்றினால் போதும். ஒவ்வாமையால் அவதிப்படுபவர்கள் புகைவெளிப்படுத்தும் பத்தி, சூடம், சாம்பிராணியை தவிர்க்கலாம்.
தாமதமாக நேர்த்திக்கடனை செலுத்த கூடாதா?
கு.ரஜினிகலை, கடலுார்
கடவுள் அருளால் விருப்பம் நிறைவேறியதும், நேர்த்திக்கடனை செலுத்துவது அவசியம். குடும்பச் சூழல், வேலைவாய்ப்பு, பொருளாதாரம் போன்ற நியாயமான காரணத்திற்காக தாமதம் ஏற்பட்டால் தவறில்லை.

