ADDED : ஜூலை 22, 2019 10:39 AM

பஞ்சமுக விநாயகரின் சிறப்பு என்ன?
எஸ்.தினேஷ், மதுரை
விநாயகரின் கோலங்கள் பதினாறு. இதில் பதினோராவது வடிவம் பஞ்சமுக விநாயகர். ஹேரம்ப கணபதி என்னும் இவருக்கு ஐந்து முகம், பத்து கைகள் இருக்கும். சிங்க வாகனத்தில் வீற்றிருக்கும் இவரை வழிபட்டால் எதிரி தொல்லை, பயம் மறையும்.
கோயில் குளத்தில் காசுகளை எறிகிறார்களே... ஏன்?
ரா.கீதாஞ்சலி திருக்கோவிலுார்
குளத்தையும், பணத்தையும் அவமதிக்கும் செயல் இது. இதனால் யாருக்கு என்ன பயன்?
* அமிர்தயோகம், சித்தயோகம், மரணயோகம் என்பது என்ன?
ஆர். பாரதி மகேஷ், சென்னை
வானில் உள்ள 27 நட்சத்திரங்களையும், வாரத்தில் உள்ள 7 கிழமைகளையும் அடிப்படையாக கொண்டு மூன்று வித யோகங்கள் உள்ளன. வெற்றி பெற சித்த யோகமும், ஆயுள், ஆரோக்கியம் பெற அமிர்தயோகமும் ஏற்றது. மரணயோகம் நாளில் சுபநிகழ்ச்சி நடத்த கூடாது.
* எந்த வயது வரை பெண்கள் முடிக்காணிக்கை செலுத்தலாம்?
பெ. பொன்ராஜ் பாண்டி, மதுரை
ஏழு வயது வரை செலுத்தலாம். அதற்குள் முடியவில்லை என்றால் கூந்தலின் நுனிப்பகுதியை வெட்டிக் கொடுத்தால் போதுமானது.
அம்மனுக்கு ஏற்ற பூக்கள் என்ன?
எஸ். தர்ஷினி, புதுச்சேரி
செம்பருத்தி, மல்லிகை, தாமரை, பிச்சிப்பூ ஏற்றவை. வாசனை உள்ள பூக்களாலும் அர்ச்சனை செய்யலாம்.
பெண்கள் ஸ்படிக மாலை அணியலாமா?
ஆர். சுகுமார், திருவள்ளூர்
நவரத்தினம் போல ஸ்படிகமும் ஒரு ஆபரணம். அதனால் அணியலாம்.
பலிபீடத்தை வணங்குவது கட்டாயமா?
டி.ராதா, பெங்களூரு
கொடிமரத்தை வணங்கும் போது பலிபீடத்தையும் வணங்க வேண்டும். பெரும்பாலும் இரண்டும் சேர்ந்தே இருக்கும். பலிபீடத்தை வழிபட்டால் தீய சிந்தனைகள் அகலும். உடல் நலம் நன்றாக இருக்கும்.
துாங்கும் குழந்தைக்கு திருஷ்டி சுற்றலாமா?
என்.சுகில், திண்டுக்கல்
கூடாது. விழித்திருக்கும் நேரத்தில் சுற்றுங்கள். குளிப்பாட்டுவது, உணவு ஊட்டுவது என எந்த வேலையாக இருந்தாலும் துாங்கும் போது தவிர்ப்பது நல்லது.