
* காலையில் வீட்டில் கிளிகள் சத்தமிடலாமா?
டி.அஜித், சென்னை
பறவைகளின் ஒலி தெய்வீகம் நிறைந்தது. அவற்றின் கீச்சொலி அதிகாலையில் காதில் விழுந்தால் நன்மை ஏற்படும். மாணிக்க வாசகர் திருப்பள்ளியெழுச்சியில், ''மங்களகரமான சங்கு வாத்தியம், பறவைகள் சத்தமிடும் ஒலிகளையும் அதிகாலையில் கேட்டு எம்பெருமான் பள்ளி எழுந்து அருள்புரிய வேண்டும்'' என பாடியுள்ளார்.
* கொரோனா நோய் தீர என்ன செய்யலாம்?
சி.சந்தோஷ், மதுரை
மகார்ணவம் கர்ம விபாகம் என்னும் நுாலில், ''ருத்ர மந்திரத்தை பாராயணம் செய்து 1008 கலசங்களால் சிவனுக்கு அபிஷேகம் செய்தால் கொடிய நோய் தீரும்''என குறிப்பிடப்பட்டுள்ளது.
* பூஜையின் போது மணியடிப்பது ஏன்?
வி.வர்ஷா, கடலுார்
மணியோசை மங்களகரமானது. இதை எழுப்பினால் தீய சக்தி மறைந்து தெய்வீக சக்தி அதிகரிக்கும்.
குளித்ததும் ஈரத்துடன் பூஜை செய்யலாமா?
கே.லாவண்யா, புதுச்சேரி
ஈரத்துணியுடன் பூஜை செய்வது, சாப்பிடுவது கூடாது. காய்ந்த உடை உடுத்தி, நெற்றியில் திருநீறு பூசி திலகமிட்டு கடவுளை வழிபடுவதே சரியான முறை.
* காயத்ரி மந்திரத்தின் சிறப்பு என்ன?
பி.ஷைனிகா, கோவை
காயத்ரி என்பதற்கு 'ஜபம் செய்பவரைக் காப்பவள்' என்று பொருள். சில சூழல்களில் அறிவு, மன பலத்தை இழந்து தவறு செய்ய துணிகிறான் மனிதன். அந்நிலையில் கடவுள் அருளால் வலிமை பெற வேண்டும் என்பதே இந்த மந்திரத்தை ஜபிப்பதன் நோக்கம். காயத்ரி ஜபம் செய்பவர்கள் அறிவுக் கூர்மை பெற்று வெற்றி காண்பர்.
கோபம் உள்ள இடத்தில் குணம் இருக்குமாமே...
கே.த்ரிஷா, ஊட்டி
தவறு செய்பவர்களை கண்டதும் நல்லவர்கள் கோபப்பட்டாலும், அது வந்த வேகத்தில் மறைந்து விடும். அவர்களின் இயல்பான அன்பு வெளிப்படத் தொடங்கும். ஆனால் தீயவர்களின் மனதில் தீ போல கோபம் கனன்று கொண்டே இருக்கும்.
அமாவாசையன்று எண்ணெய் தேய்த்து குளிக்கலாமா?
எம்.கிருத்திக், சிவகங்கை
கார்த்திகை, ஏகாதசி போல அமாவாசையும் முக்கிய விரத நாள். இந்நாளில் எண்ணெய் தேய்த்துக் குளித்தல், முடி வெட்டுதல், நகம் களைதல் கூடாது.
கடவுளின் திருநாமங்களை எப்போது எழுதலாம்?
ஆர்.முகில், திருவள்ளூர்
வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் எழுதலாம்.