
* வீட்டில் ஹோமம் நடத்துவது அவசியமா? எத்தனை ஆண்டுக்கு ஒரு முறை ஹோமம் நடத்த வேண்டும்?
கே.சிந்துஜா, சென்னை
அவசியம். ஆண்டுக்கு ஒருமுறை ஹோமம் நடத்துவதால் நன்மைகள் கிடைக்கும்.
* எழுதும் முன் பிள்ளையார் சுழி இடுவதன் நோக்கம் என்ன?
பி.ஹரிணி,மதுரை
எடுத்த செயல் தடையின்றி நடக்க வேண்டும் என்பதற்காக. அகார, உகார, மகாரம் சேர்ந்ததே ஓம் என்னும் மந்திரம். அதில் நடுவிலுள்ள உகாரம் என்பது உயிர்நாடி. அதுவே பிள்ளையார் சுழி.
* கண்டச்சனி என்றால் என்ன? பரிகாரம் உண்டா?
எல்.கஜலட்சுமி, திருப்பூர்
ஜென்ம ராசியில் இருந்து ஏழாம் வீட்டில் சனி இருக்கும் காலம் கண்டச்சனி. சனி தோறும் எள்ளுப்பொடியும் தயிரும் கலந்த சாதத்தை காகத்திற்கு வைத்து வணங்குங்கள்.
* வாயால் ஊதி விளக்கை அணைப்பது கூடாதா?
எம்.வைதேகி, விழுப்புரம்
விளக்கு என்பது மகாலட்சுமி வாசம் செய்யும் இடம். அறியாமல் கூட அதன் மீது எச்சில் பட்டுவிடக்கூடாது. மலரைக் கொண்டே விளக்கை மலையேற்றலாம்(அணைத்தல்).
சண்டித்தனம் செய்யும் குழந்தைகளை திருத்துவது எப்படி?
ஆர்.பவித்ரா, காஞ்சிபுரம்
குழந்தைகளை அடிப்பது கூடாது. குழந்தை கிருஷ்ணரின் கதைகளை தினமும் சொல்லுங்கள்.
வலம்புரி விநாயகர், இடம்புரி விநாயகர் வேறுபாடு என்ன?
எஸ்.ராஜேஷ், சிவகங்கை
துதிக்கை வலது புறம் திரும்பியிருந்தால் வலம்புரி விநாயகர். துதிக்கை இடது புறம் நோக்கி இருந்தால் இடம்புரி விநாயகர். வழிபடுவோருக்கு வலம்புரி விநாயகர் செல்வத்தையும், இடம்புரி விநாயகர் ஞானத்தையும் வழங்குகிறார்.
எதிரி தண்டனை பெற வேண்டும் என வழிபாடு செய்வது தவறா?
டி.திவாகர், புதுச்சேரி
தவறுதான். எதிரியாக இருந்தாலும் அவரும் மனம் திருந்தி வாழ வேண்டும் என வேண்டுவதே சரியானது. யார் யாருக்கு எப்படி எப்போது தண்டனை தர வேண்டும் என கடவுளுக்குத் தெரியும்.
சுவாமிக்கு உரிய மந்திரம், ஸ்தோத்திரங்களை நினைத்த நேரத்தில் சொல்லலாமா?
எம்.சந்தோஷி, கோவை
தாராளமாக சொல்லலாம். வழிபாட்டிற்கு காலம், நேரம், இடம் பார்க்க தேவையில்லை.
அசைவம் சாப்பிட்ட அன்று கோயிலுக்கு செல்லலாமா?
வி.வனிதா, திருவள்ளூர்
செல்லலாம். சாப்பிடும் உணவு சைவமா, அசைவமா என்பது முக்கியமல்ல. மனதை ஒருமுகப்படுத்தி கடவுளை மட்டுமே நினைக்க வேண்டும்.
மவுன விரதம் இருந்தால் பலன் சீக்கிரம் கிடைக்குமா?
பி.மாதவி, கள்ளக்குறிச்சி
கிடைக்கும். செவ்வாய்க்கிழமை மவுனவிரதம் இருந்தால் நினைத்தது நிறைவேறும். 'செவ்வாயோ வெறும் வாயோ' என்பது இதை குறிப்பிடுகிறது.