
இரண்டு திருமணங்களை ஒரே நேரம், ஒரே இடத்தில் நடத்தலாமா
எஸ்.சுகந்த், திருவள்ளூர்
நடத்தலாம். வெவ்வேறு முகூர்த்த நேரம் இருப்பது அவசியம்.
காய்ச்சிய பால், பச்சைப்பால் இரண்டில் எதை பிரசாதமாக வைப்பது நல்லது
எம்.தர்ஷினி, விழுப்புரம்
அபிஷேகத்திற்கு பச்சையாகவும், நைவேத்யத்திற்கு காய்ச்சியும் பயன்படுத்துங்கள்.
* மூலவருக்கு விளக்கேற்றினால் போதுமா அல்லது எல்லா சன்னதியிலும் ஏற்றணுமா
பி.வர்ஷா, ஊட்டி
மூலவருக்கு விளக்கு ஏற்றினால் போதும். வேண்டுதல், பரிகாரத்திற்கு ஏற்ப மற்ற சன்னதிகளில் ஏற்றலாம்.
உற்ஸவரை வணங்கினால் மூலவரை வணங்கிய பலன் கிடைக்குமா
கே.மதுபாலா, சிவகங்கை
திருவிழா நாட்களுக்கு மட்டும் இது பொருந்தும். மற்ற நாளில் மூலவரை வணங்கிய பிறகே உற்ஸவரையும் வணங்குங்கள்.
விரதத்தன்று பகலில் துாங்கலாமா...
வி.ஸ்மிருதி, பெங்களூரு
துாங்கக்கூடாது. நாள் முழுவதும் கடவுளை நினைத்து உண்ணாமல் உறங்காமல் இருப்பது தான் விரதம்.
வெளிநாட்டில் உள்ள குழந்தைக்கு குலதெய்வத்திற்காக அங்கேயே முடியிறக்கலாமா
ஆர்.அவந்திகா, கோவில்பட்டி
குலதெய்வத்துக்கு காணிக்கையாக கொஞ்சம் முடியை எடுத்து வைத்தபின் அங்கேயே முடியிறக்கலாம். ஊர் திரும்பியவுடன் குலதெய்வத்தை தரிசியுங்கள்.
* பெற்றோர் சிரார்த்தத்தை மகன்கள் சேர்ந்தே தான் செய்ய வேண்டுமா
சி.மதுவந்தி, நாகர்கோவில்
சேர்ந்து செய்வது பெற்றோரை திருப்திபடுத்தும். சகோதரர்களின் ஒற்றுமை கூடும். வெவ்வேறு ஊர் அல்லது நாடுகளில் இருந்தால் தனித்தனியாக செய்யுங்கள்.
* ஒருகாலால் மற்றொரு காலைத் தேய்த்துக் கழுவக் கூடாதா...
டி. அனிதா, சோழவந்தான்
ஒரு காலின் அழுக்கு மற்ற காலுக்கும் வரும். இதனால் நோய் உண்டாகும். நகம் கடிப்பது, விளக்கு வைக்கும் நேரத்தில் துாங்குவது போல் இதுவும் செய்யக் கூடாதவை.
* காகத்திற்கு சோறிடும் போது எள் சேர்ப்பது அவசியமா
எஸ்.சாய்சரண், திருத்தணி
திதி கொடுக்கும் நாளைத் தவிர மற்ற நாளில் சோறு மட்டும் போதும்.

