
* முயற்சி வெற்றி பெற...
கே.விக்னேஷ், ஸ்ரீபெரும்புதுார்
முயற்சி வெற்றி பெற கடவுளின் அருள் வேண்டும். அதற்கு எந்த செயலையும் நல்ல நாளில் தொடங்கி திட்டமிட்டு செயல்படுங்கள்.
ஆன்மிக ஈடுபாடு தானாக வருமா....
எம்.சந்தியா, கடலுார்
சிலருக்கே இது வரும். மற்றபடி குழந்தைகளுக்கு பக்தியை சிறு வயதில் இருந்து பெற்றோரே
பழக்க வேண்டும். இல்லாவிட்டால் நிம்மதியின்றி தவிக்க நேரிடும்.
* ஜாதகம் இல்லாவிட்டால் பொருத்தம் பார்ப்பது எப்படி
பி.மிருதுளா, திருப்பூர்
தமிழ் பெயரின் முதல் எழுத்திற்கான நட்சத்திரத்தைக் கொண்டு பொருத்தம் பார்க்கலாம். தெய்வத்திடம் பூக்கட்டி வைத்தும் உத்தரவு கேட்கலாம்.
பேராசையைத் தடுக்க என்ன செய்யலாம்
எஸ்.பிருந்தா, ராமேஸ்வரம்
தகுதிக்கு மீறிய விஷயங்களில் ஈடுபடக் கூடாது. தினமும் ஐந்து நிமிடம் தியானம் செய்யுங்கள். எல்லாத் தீமைகளும் மறையும்.
பிராப்தம் என்றால் என்ன
எம்.தீபிகா, பெங்களூரு
முற்பிறவியில் செய்த நன்மை, தீமையைப் பொறுத்து வாழ்வு அமைகிறது. இதனை 'பிராப்தம்' என்கிறோம். 'கிடைக்கப் பெற்றது' என்பது இதன் பொருள்.
* கொடிமரம், பலிபீடத்தை தொட்டு வணங்கலாமா
ஆர்.ராஜேஷ், திருநெல்வேலி
கூடாது. கொடிமரம் உள்பட வழிபாட்டுக்குரிய எதையும் தொடாதீர்கள்.
மணமக்கள் மீது மஞ்சள் பூசிய அரிசியைத் துாவுவது ஏன்
பி.வினிதா, களியக்காவிளை
'அட்சதை' எனப்படும் இதை பச்சரிசியில் மஞ்சள் பொடி கலந்து தயாரிப்பர். 'குறை இல்லாத வாழ்வு அளிப்பது' என்பது இதன் பொருள்.
பாசி மாலை, ஸ்படிக மாலை இரண்டும் ஒன்று தானே...
வி.பத்மஸ்ருதி, திருத்தணி
இல்லை. பகுத்தறிவு என்னும் பெயரால் படுகுழியில் விழுந்த சிலர் இப்படி சொல்கின்றனர். ஸ்படிகம், ருத்ராட்சம் போன்ற ஆன்மிக சின்னங்களை அணிந்தால் மனத்துாய்மை, நல்ல புத்தி வரும்.
* பெரியவர்களை வணங்கும் போது அவர்களின் காலைத் தொடலாமா
தி.பாரதி, திருப்பரங்குன்றம்
வேண்டாம். காலில் விழுந்து வணங்கினால் போதும்.
வீட்டில் எந்த பூஜை செய்தாலும் மஞ்சள் பிள்ளையாரை வணங்குவது ஏன்
வி.சந்தோஷி, கள்ளக்குறிச்சி
முயற்சி தடையின்றி நிறைவேற விநாயகரை வழிபட வேண்டும். அதற்காகவே மங்களகரமாக மஞ்சள் பிள்ளையாரை வணங்குகிறோம். சந்தனம், தர்ப்பை புல்லாலும் விநாயகரை செய்து வழிபடலாம்.

