ADDED : அக் 10, 2021 04:49 PM

கே.ராஜேந்திரன், திருவள்ளூர்
*தொழில் தொடங்கும் போது சுபம், லாபம் என எழுதுவது ஏன்?
தொழில் தடையின்றி நடக்கவும், லாபம் பெருகவும் 'சுபம், லாபம்' என்று எழுதி விநாயகரை வழிபடுகிறோம்.
என்.ஜெ.தீபிகா, திருப்பூர்
*பிரதோஷம் என்பதன் பொருள் என்ன?
தேவர்கள் பாற்கடலைக் கடைந்த போது வெளிவந்த விஷத்தை குடித்து உயிர்களுக்கு துன்பம் ஏற்படாமல் சிவபெருமான் காப்பாற்றினார். அந்த நேரத்தையே பிரதோஷம் என்கிறோம். 'தோஷம் நீக்கி நன்மை தரும் காலம்' என்பது இதன் பொருள்.
எஸ்.ஜெயந்தி, மதுரை
*வீட்டு வாசலில் எந்த செடி வளர்க்கலாம்? குறிப்பாக பிரண்டை இருக்கலாமா?
வழிபாட்டிற்கு பயன்படும் பூச்செடிகளை முன்வாசல் பக்கத்திலும், பிரண்டை, துாதுவளை போன்ற மருத்துவ பயன் தரும் மூலிகைச் செடிகளை பின்புறத்திலும் வளர்க்கலாம்.
டி.கே.சுப்ரமண்யன், விழுப்புரம்
*காஞ்சி மஹாபெரியவர் தலையில் சூடிய குஞ்சிதபாதம் பற்றி சொல்லுங்கள்
நடராஜரின் துாக்கிய திருவடியை குஞ்சிதபாதம் என சொல்கிறோம். இதற்காக பிரத்யேக மாலையை சுவாமிக்கு அணிவித்து அதை பிரசாதமாக மகான்களுக்கு கோயிலில் இருந்து கொடுப்பர். அந்த மாலையை அவர்கள் நடராஜரின் திருவடியாகக் கருதி தலையில் சூடிக் கொள்வர்.
எல்.ராஜி, பெங்களூரு
*ஒரே மாதத்தில் இரண்டு பவுர்ணமி வந்தால் திருமணம் நடத்தலாமா?
கூடாது. ஒரே மாதத்தில் இரண்டு பவுர்ணமி, அமாவாசை வந்தால் திருமணம் நடத்தக் கூடாது.
கே.ஜானகி, திருநெல்வேலி
*தினமும் காலையில் குளிக்காமல் இரவில் துாங்கும் முன் குளிக்கலாமா?
கூடாது. சூரிய அஸ்தமனத்திற்கு முன்பாக குளிப்பது நல்லது. கிரகணம், இறப்பு வீட்டுக்குச் செல்லுதல் போன்ற தவிர்க்க முடியாத நாட்களில் இரவில் குளிக்கலாம்.
என்.ஞானகுரு, சிவகாசி
*மந்திரங்களின் முடிவில் நமஹ என்பது ஏன்?
நமஹ என்பதற்கு நமஸ்கரித்தல், சரண்புகுதல் என்பது பொருள். 'நமஹ... நமஹ...' என்று சொல்லி வழிபட்டால் விருப்பம் யாவும் கடவுள் அருளால் நம்மைத் தேடி வரும் என்கிறது வேதம்.
ஆ.ரவீந்திரன், குஞ்சன்விளை, கன்னியாகுமரி
*சுவாமிக்கு படையல் இடும் போது வெற்றிலை வைக்கணுமா?
ஆமாம். தாம்பூலம் எனப்படும் வெற்றிலையுடன் பாக்கு இருப்பது மிக அவசியம்.
பி.ஸ்ரீபாதராஜன், முடிச்சூர், சென்னை
*ருத்ராட்சத்தின் சிறப்பு என்ன? யார் அணியலாம்?
சிவனின் கண்களில் இருந்து தோன்றியது ருத்ராட்சம். இது சிவனருளை பெற்றுத் தரும். முதன் முதலில் ருத்ராட்சம் அணிபவர்கள் சிவன் கோயிலில் அர்ச்சனை செய்த பின் அதை அணிய வேண்டும். இதை அணிந்தால் தீய சிந்தனை மறையும். மனம், உடல் நலமாக இருக்கும். ரத்தக்கொதிப்பு, மனஇறுக்கம் விலகும். பெண்கள் மாதவிடாய் காலத்தில் மட்டும் அணிவதை தவிர்க்கவும்.
