ADDED : நவ 16, 2021 02:12 PM

* ஐயப்பனுக்கு கார்த்திகை மாத விரதமிருக்க வழிமுறைகள் என்ன?
கே.உமாசங்கர், திண்டுக்கல்
கார்த்திகை முதல் நாளில் இருந்து துவங்க வேண்டும். நதி அல்லது புண்ணிய தீர்த்தங்களில் நீராடி கோயிலுக்குச் சென்று மாலை அணியுங்கள். தினமும் மாலை வீட்டில் தீபங்கள் ஏற்றினால் போதும். தெய்வங்களின் அருளும் முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும்.
* வாழ்நாள் முழுவதும் பாடுவதற்கு ஏற்ற தேவாரப் பாடல் உண்டா?
எம்.லட்சுமி, கோயம்புத்துார்
எல்லா பதிகங்களையும் பாடலாம். ஒவ்வொரு பதிகத்தையும் தினமும் பாடினால் புண்ணியம் பெறலாமே!
* குழந்தைப்பேறு கிடைக்க எந்த கோயிலுக்கு செல்லலாம்?
கே.உமா, தேனி
குழந்தைப்பேறுக்காக கிருஷ்ணர் கோயில்களில் வேண்டுதல் செய்யுங்கள். ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஜெகந்நாதபெருமாள் கோயிலில் குழந்தை கிருஷ்ணரை மடியில் வைத்து அர்ச்சனை செய்கின்றனர்.
* குழந்தைக்கு கருப்பு மை பொட்டு வைப்பது கட்டாயமா?
எஸ்.புஷ்பமாலா, அச்சரப்பாக்கம்,
குழந்தையை துாக்குவதும், ரசிப்பதும் இயல்பு. அவர்களின் கண் படாமல் இருக்க கருப்பு மை இடுகின்றனர்.
* வாசலில் கற்றாழை கட்டுவது நல்லதா?
ஜி.பிரபாகரன், சிவகங்கை
கிருமி நாசினியான கற்றாழையை வீட்டு வாசலில் கட்டுவது நல்லது. திருஷ்டி, தீயசக்திகள் அணுகாது.
* கலியுகம் முடிய இன்னும் எத்தனை ஆண்டுகளாகும்?
பி.செல்லப்பன், தேரூர், கன்னியாகுமரி
இன்னும் நான்கு லட்சம் ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய நேரத்தில் அந்த கவலை எதற்கு.
* மனைவி கர்ப்பமாக இருக்கும் போது கணவன் தான தர்மம் செய்யலாமா?
வே.சரவணன், வேப்பம்பட்டு, திருவள்ளூர்
செய்யலாம். இதனால் சுகப்பிரசவம் ஏற்படும்.
* பிரம்ம முகூர்த்தத்தில் பூஜையறையில் எத்தனை விளக்குகள் ஏற்ற வேண்டும்?
த.நேரு, திட்டக்குடி
பிரதான விளக்கு, துணை விளக்கு ஏற்றினால் வீடே மங்களகரமாக இருக்கும்.
