ADDED : நவ 22, 2021 10:49 AM

ஆர்.வித்யா, சென்னை
* கங்கை, காவிரி என சில நதிகளை மட்டும் புனிதமாக கருதுவது ஏன்?
கங்கை, காவிரி நதிகளுக்கு வரலாறு உண்டு. அதன் கரையோரங்களில் திருத்தலங்கள் உள்ளன. எல்லா நதிகளும் புனிதமானவையே. அதனால் அவற்றின் துாய்மையை காப்பது நம் கடமை.
டி.மதுமதி, கோவை
* சுவாமியின் திருநாமங்களை தீட்டுக் காலத்தில் ஜபிக்கலாமா?
சுவாமியின் திருநாமங்களை எந்த நேரத்திலும் ஜபிக்கலாம். குருநாதரிடம் உபதேசம் பெற்ற மந்திரங்களை மட்டும் தீட்டுக் காலத்தில் ஜபிக்க கூடாது.
எல். வரலட்சுமி, புதுச்சேரி
* முருகனுக்கு அரோகரா என்கிறார்களே....ஏன்?
'ஹர ஹர' என்பதே 'அரோகரா' என்றானது. 'ஹர' என்றால் 'போக்குதல்'. 'துன்பம், பாவங்களை போக்கியருள வேண்டும் முருகா' என்பதே இதன் நோக்கம்.
ஆர்.அனுராதா, பெங்களூரு
* குழந்தைகளின் எதிர்காலம் சிறக்க என்ன செய்யலாம்
துாங்கச் செல்வதற்கு முன் பக்தி, நீதிக் கதைகளைச் சொல்லுங்கள். படிப்பில் சிறக்க புதன்கிழமைகளில் நவக்கிரக மண்டபத்திலுள்ள புதன் பகவானுக்கு அர்ச்சனை செய்யுங்கள்.
எம்.சந்திரன், திருநெல்வேலி
* கோயிலில் இரவில் ஹோமம் நடத்தலாமா?
கும்பாபிஷேகத்தின் போது மட்டும் மாலை நேரத்தில் தொடங்கி இரவில் ஹோமத்தை முடிக்கலாம். இரவில் ஹோமம் நடத்த ஆகமம் அனுமதிக்கவில்லை.
என்.ராஜேஸ்வரி, சிதம்பரம்
* நீண்ட காலமாக உடல்நலக்குறைவால் சிரமப்படுகிறேன். பரிகாரம் சொல்லுங்கள்.
மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாத சுவாமிக்கு நேர்ந்து கொள்ளுங்கள். செவ்வாயன்று விரதம் இருப்பது நல்லது. மருத்துவரிடம் சிகிச்சை பெறுவதோடு 'பேராயிரம் பரவி' எனத் தொடங்கும் திருத்தாண்டகத்தை தினமும் பாடுவது நல்லது.
என்.வினோதா, நாகர்கோவில்
* தாலி கட்டும் போது பெண்கள் குலவையிடுகிறார்களே...
குலவைச் சத்தமும் மந்திரத்திற்கு ஈடானது. இதன் ஒலி யார் காதில் விழுகிறதோ அவர்களின் குடும்பத்திலும் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும்.
ஜி.கோபி, காஞ்சிபுரம்
* காது குத்தும் போது குழந்தையை தாய்மாமன் மடியில் அமரச் செய்வது ஏன்?
தாயை 'அம்மா' என்றும், தாய்மாமனை 'அம்மான்' என்றும் சொல்வர். தாயும், தாய்மாமனும் ஒன்றே. சகோதர உறவைப் பலப்படுத்தவே பெரியவர்கள் இதை உருவாக்கியுள்ளனர்.
கே.பாக்கியம், சிவகங்கை
* அஷ்டமத்துச்சனியால் பாதிப்பு ஏற்படுமா... பரிகாரம் என்ன
உடல்நலம் பாதிக்கப்படலாம். ஆயுளுக்கு கண்டம் ஏற்படலாம். திங்களன்று சிவபெருமானுக்கு வில்வமாலை சாத்தி வழிபடுங்கள்.
