
பி.ஆகாஷ், பிள்ளையார்பட்டி சிவகங்கை.
*சம்பாதிப்பதில் சிலருக்கு அக்கறை இல்லையே...
பணத்தின் அருமையை சிறுவயதில் கற்றுக் கொடுத்தால் தானாகவே சம்பாதிப்பதில் அக்கறை ஏற்படும்.
ஆர்.ஆனந்தி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல்.
*நாரதர் பற்றிச் சொல்லுங்கள்.
மூன்று காலத்தையும் உணர்ந்த ஞானி. தீயவர்களை தோற்கடிப்பதில் வல்லவர். ஆணவம் மிக்க இரணியனை அவனது மகன் பிரகலாதன் மூலமாகவே அழித்தார். கருவிலேயே பிரகலாதனுக்கு எட்டெழுத்து மந்திரத்தை உபதேசித்தார்.
வி.கைலாஷ், சேரன்மகாதேவி, திருநெல்வேலி.
*எதிர்பார்ப்பு இல்லாமல் வழிபாடு செய்தால்...
இதை 'நிஷ்காம்ய பக்தி' என்பர். இது பாவத்தைப் போக்கும். மோட்சம் தரும்.
வி.விவேக், பணப்பாக்கம், கடலுார்.
*சூரியனை வழிபட ஸ்லோகம் சொல்லுங்கள்
ஜபாகு ஸும சங்காசம்
காஸ்ய பேயம் மகாத்யுதிம்
தமோரிம் சர்வ பாபக்னம்
ப்ரணதோஸ்மி திவாகரம்
பொருள்: செம்பருத்தி போல சிவந்த நிறம் கொண்டவரே! கஷ்யப முனிவரின் புத்திரரே! பாவங்களைச் சுட்டெரிப்பவரே! திவாகரனே! உம்மை வணங்குகிறேன்.
எல்.முருகதாஸ், உசிலம்பட்டி, மதுரை.
*அருணகிரிநாதர் சன்னதி எங்கு உள்ளது?
திருவண்ணாமலையில் அருணகிரிநாதர் கோயில் உள்ளது. முருகன் கோயில்களில் சன்னதி இருக்கும்.
ஆர்.சேதுராமன், சித்தாமூர், செங்கல்பட்டு.
*ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் என்பது ஏன்?
மனிதனுக்கு அறிவு அவசியம் என்பதால் தினமும் நல்ல நுால்களைப் படிக்க வேண்டும். (ஓதாமல் - படிக்காமல்)
எஸ்.ரம்யா, தில்சாத் கார்டன், டில்லி.
*உறவினர்களின் குறையைப் பெரிதுபடுத்தினால்...
குறையைப் பெரிதுபடுத்தினால் நிம்மதி போகும்.
எம்.கோபிகிருஷ்ணன், அடகனஹள்ளி, மைசூரு.
*ஜுர தேவருக்கு மிளகு அன்னம் படைப்பது ஏன்
ஜுரதேவருக்கு மிளகு அன்னம் படைத்தால் நோய்கள் தீரும். உடல்நிலை சீராகும்.
வி.பிரணவ், கிணத்துக்கடவு, கோயம்புத்துார்.
*கொடிமரம் முன்புதான் விழுந்து வணங்க வேண்டுமா?
ஆம். தெய்வீக சக்தி அனைத்தும் கொடிமரத்தின் அருகிலுள்ள பலிபீடத்தில் இருக்கும். எனவே தான் கொடிமரம் முன்பு விழுந்து வணங்குகிறோம்.
எல்.பூர்ணிமா, கணபதிபுரம், கன்னியாகுமரி.
*இறப்பு போல பிறப்பிலும் தீட்டு உண்டா...
தீட்டு உண்டு. குழந்தை பிறந்தால் சிலர் 10 நாட்கள் அல்லது 30 நாட்கள் கோயிலுக்கு செல்ல மாட்டார்கள்.