
ஆர்.கமலா, கல்யாண்புரி, டில்லி.
*சரஸ்வதிக்கு பிரியமானவர்கள் யார்?
கல்வி, இசை, நடனம், விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்கள் மீது சரஸ்வதிக்கு பிரியம் அதிகம்.
ஆர்.லட்சுமி, அம்பாசமுத்திரம், திருநெல்வேலி.
*சகலகலாவல்லி (சரஸ்வதி) மாலையை (பாடல்) பெரியவர்கள் படிக்கலாமா?
இதனை அனைவரும் படிக்கலாம். நாம் கேட்கும் அனைத்து வரத்தையும் சரஸ்வதி கொடுப்பாள்.
ஆர்.ரங்கசாமி, ஒசகோட்டே, பெங்களூரு.
*விஜயதசமி அன்று கோயிலில் அம்பு விடுவது ஏன்?
ஆயுதபூஜை அன்று தொழில் கருவிகளுக்கு பூஜை செய்வர். அதை விஜயதசமி அன்று பயன்படுத்தினால் வெற்றி கிடைக்கும் என்பதை உணர்த்தும் நிகழ்ச்சி இது.
எம்.ஸ்ரீவித்யா, ஆவடி, திருவள்ளூர்.
*அட்சர அப்யாசம் என்றால் என்ன?
அட்சரம் என்றால் எழுத்து. அப்யாசம் என்றால் பயிற்சி. விஜயதசமியன்று குழந்தைகளுக்கு எழுத்துப் பயிற்சியை தொடங்குவதே அட்சர அப்யாசம்.
எஸ்.சுந்தர், சிறுமுகை, கோயம்புத்துார்.
*சரஸ்வதி ஆவாஹனம் என்றால் என்ன?
பூஜைக்காக சரஸ்வதியை மந்திர வடிவில் வரவழைப்பதே சரஸ்வதி ஆவாஹனம். இதை விஜயதசமிக்கு முந்திய மூன்று நாட்களில் செய்வர்.
ஜே.பத்மாவதி, பரமக்குடி, ராமநாதபுரம்.
*கூத்தனுாரை சரஸ்வதியின் ஊராக சொல்வது ஏன்?
தமிழ்ப்புலவர் ஒட்டக்கூத்தருக்கு சரஸ்வதி அருள்புரிந்ததால் இப்பெயர் வந்தது. ஒட்டக்கூத்தனுார் என்பது 'கூத்தனுார்' ஆனது.
எஸ்.மகாலட்சுமி, தாம்பரம், சென்னை.
*சரஸ்வதி பூஜையன்று தட்சிணாமூர்த்தி, ஹயக்ரீவரை வழிபடலாமா?
ஞானம், அறிவு தரும் இவர்கள் இருவரையும் விஜயதசமியன்று வழிபடுவோர் கல்வியில் சிறந்து விளங்குவர்.
த.கீதா, சின்னமனுார், தேனி.
*நாமகள் என சரஸ்வதியை அழைப்பது ஏன்
நாக்கில் குடியிருப்பதால் சரஸ்வதியை 'நாமகள்' என்கிறோம். 'நாவில் சரஸ்வதி நற்றுணையாக' என்கிறது கந்தசஷ்டி கவசம்.
ஆர்.கமலக்கண்ணன், கீரனுார், கள்ளக்குறிச்சி.
*சரஸ்வதியின் அடையாளம் வெள்ளை... ஏன்?
கள்ளம், கபடமின்மை, அறிவு, துாய்மை ஆகிய பண்புகளின் அடையாளம் வெள்ளை.
வி.ராஜ்குமார், மார்த்தாண்டம், கன்னியாகுமரி.
*சரஸ்வதிக்கு கோயில் எங்குள்ளது?
திருவாரூர் அருகிலுள்ள கூத்தனுாரில் கோயிலும், மதுரை, காஞ்சிபுரம், உத்தமர்கோவில் (திருச்சி), வாணியம்பாடி, வேதாரண்யத்தில் தனி சன்னதிகளும் உள்ளன.