தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!


ADDED : டிச 23, 2014 12:29 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 23, 2014 12:29 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

** கண்திருஷ்டிக்காக பூசணிக்காயை உடைப்பது சரியா? பிறருக்கு இடையூறாகும் என்பதால் பாவம் தானே?

உ. அழகர்சாமி, காரைக்குடி

இறை நம்பிக்கை, மூட நம்பிக்கை இரண்டும் வேறு வேறானவை. இரண்டையுமே ஒதுக்குபவர்கள் நாத்திகர்கள். அவர்களால் இது போன்ற பிரச்னை ஏற்படுவதில்லை. பகுத்தறிவோடு இறைவனை வழிபடுபவர்களாலும் எந்த இடையூறும் உண்டாவதில்லை. மூட

நம்பிக்கையுடன் இறைவனை அணுகுபவர்களால் தான் இந்த மாதிரியான சூழ்நிலை உண்டாகிறது. கண் திருஷ்டி நீங்க பூசணிக்காயை உடைப்பது நல்லது தான். ஆனால், பலரும் காண வேண்டும் என்ற எண்ணத்துடன் நடுரோட்டில் உடைப்பது மூடநம்பிக்கை. ஒரு ஓரமாக உடையுங்கள். அவ்வளவு தான்.

* தினமும் மாலை வேளையில் வாசலில் விளக்கேற்றுவதால் நற்பலன் உண்டாகுமா?

ஆர்.சந்தியாராம், குன்றத்தூர்

நற்பலன் கிட்டும் என்பதால் தானே விளக்கேற்றச் சொல்லியிருக்கிறார்கள். சந்தேகம் இல்லாமல் இது போன்ற விஷயங்களைச் செய்து வாருங்கள். பகல் முழுவதும் சூரியஒளி கிடைக்கிறது. இரவு நேரம் வந்ததும் இருள் சூழ்ந்து விடுகிறது. இருள் அறியாமையைக் குறிப்பது. தவறுகளுக்குத் துணை செய்வது. அறியாமையை ஒழிக்கவும், தவறு நீங்கவும் மாலையில் வீட்டில் விளக்கேற்றி வழிபடுகிறோம். மின்விளக்கு எரிகிறதே என்று நீங்கள் கேட்கலாம். மின்சாரம் எப்போது போகும், விளக்கு எப்போது அணைந்து விடும் என்பது நமக்குத் தெரியாது. மகாலட்சுமி நம் இல்லம் தேடி வரும் நேரமான மாலையில் இருள் கவிய இருப்பது அபசகுனமாக இருக்கும். எனவே, மின்விளக்கு இருந்தாலும் அகல் விளக்கு ஏற்றி வழிபடுவதால் மகாலட்சுமி நம் வீட்டிற்கு எழுந்தருளி அருள்புரிவாள்.

பைரவருக்கு வடைமாலை சாத்தும்போது உப்பில்லாமல் தயாரிக்கிறார்களே! ஏன்?

ஆர்.வி.என்.எஸ்.மணி,மதுரை

சாஸ்திர ரீதியாக அப்படி எதுவும் சொல்லப்படவில்லை. பைரவர் வழிபாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் சீர்காழி, திருப்புவனம்(தஞ்சாவூர்) போன்ற தலங்களில் கூட உப்புடன் சேர்த்தே வடை தயார் செய்து மாலையாக சாத்துகிறார்கள்.

ராமநாமம், காயத்ரி மந்திரம் இரண்டில் எதை ஜபிப்பது சிறந்தது?

ஜீ. ஹரிஹரசுதன், விழுப்புரம்

எந்த மந்திரத்தை ஜபிப்பதாக இருந்தாலும் முதலில் காயத்ரி மந்திரம் ஜபித்தாக வேண்டும். இது திறவு கோல் போன்றது. இதன் பிறகு ராமநாமம் ஜபம் செய்வது மிகவும் விசேஷமானது.

* சங்கல்பம் என்று குறிப்பிடுகிறார்களே அதன் பொருள் என்ன?

அ.கிருஷ்ணசாமி, திருப்பூர்

எந்த ஒரு செயலும் குறிக்கோள் என்ற ஒன்று இல்லாமல் செய்யப்படுவதில்லை. ஏதோ ஒரு குறிக்கோளுடன் தானே சுவாமிக்கு அர்ச்சனை செய்கிறோம். ''பெயர், நட்சத்திரம் சொல்லி உங்களின் குறிக்கோள் நிறைவேற வேண்டி அர்ச்சனை செய்கிறேன்,'' என்று அர்ச்சகர் சொல்வதற்கே சங்கல்பம் என்று பெயர். 'குறிக்கோள்' என்ற பொருளைத் தருவதே சங்கல்பம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us