
** காணிக்கையாக இருந்த பணத்தை வீட்டுச் செலவிற்கு எடுத்து விட்டேன். இதற்கு பரிகாரம் ஏதும் செய்ய வேண்டுமா?
கே. வனிதா, கள்ளக்குறிச்சி
இறைவன் யாரிடமும் காணிக்கை கேட்பதில்லை. நம் மன ஆறுதலுக்காகவே காணிக்கை செலுத்துகிறோம். ஒன்றும் தவறில்லை. எடுத்த காணிக்கையை மீண்டும் செலுத்தி விடுங்கள். நிம்மதியுடன் கடமையில் கவனம் செலுத்துங்கள்.
* கோயிலுக்குச் சென்றதும் எல்லார் முன்னிலையிலும் பாடுகிறேன். அர்ச்சகர்களோ மக்களோ தடுத்ததில்லை. இப்படி நான் பாடுவது மற்றவர்களுக்கு இடைஞ்சலாகுமா?
பத்மா, கோயம்புத்தூர்
இப்படி பாடுவதற்கு இன்று ஆளில்லையே என்று வருத்தமான நிலை இருக்கிறது.
தாராளமாகப் பாடலாம். உங்களைப் போல் மற்றவர்களும் பாடட்டும்.
* கும்பாபிஷேகத்தின் போது, தீபாராதனை செய்யப்பட்ட கற்பூரம் விமானத்துளை வழியாக கருவறைக்குள் விழுந்து அம்மன் சேலை தீப்பற்றி எரிந்து விட்டது. தக்க பரிகாரம் சொல்லுங்கள்.
சி.செல்லம், மதுரை
சூடம் உள்ளே விழும் அளவிற்கு விமானத்தில் துளை இருந்திருக்காது. வேறு ஏதோ தவறுதல் நடந்துள்ளது. ஒருவேளை இருக்குமானால், முதலில் அந்த துளையை அடைத்து விடுங்கள். சேலை எரிந்ததை அம்பாளின் செயலாக எண்ணி விட்டு விடுங்கள். நிறைய பாலும், பன்னீருமாக அபிஷேகம் செய்து பிராயச்சித்த ஹோமம், கலசாபிஷேகம் செய்யுங்கள். நிறைய தயிர்ச்சாதம் நைவேத்யம் செய்து வழிபட்டு பொறுத்தருளுமாறு அம்பிகையை வேண்டிக் கொள்ளுங்கள்.
நாகதோஷம் நீங்க பரிகாரம் ஏதாவது கூறுங்கள்.
ஆர்.திவ்யா, பசுமலை
ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால வேளையில் துர்க்கை, ராகு பகவானுக்கும் அர்ச்சனை செய்து கறுப்பு உளுந்து தானம் செய்ய வேண்டும். திருநாகேஸ்வரம், காளஹஸ்தி, கீழப்பெரும்பள்ளம், திருமுருகன்பூண்டி போன்ற தலங்களில் நாகதோஷ பரிகார பூஜை செய்கிறார்கள். அதில் பங்கேற்பதும் நல்ல பரிகாரம் தான்.
* எடுத்ததற்கெல்லாம் கோபம் வராமல் இருக்க வழி சொல்லுங்கள்.
எச்.ராஜேஸ்வரி, மாங்காடு
உங்கள் மீது யாராவது கோபப்பட்டால், உங்கள் மனம் எப்படி வலிக்கிறது! இதே போல் தானே, நாம் கோபப்பட்டாலும் மற்றவர் மனம் வலிக்கும் என்று கோபம் வரும் போதெல்லாம் எண்ணிப் பாருங்கள். கோபம் போயே போச்சு!
பூஜை அறையில் சிலைகள் வைக்கக்கூடாது என்கிறார்களே. சரி தானா!
அ.கிருஷ்ணசாமி, திருப்பூர்
கூடாது என்பதில்லை. வைத்தால் தினமும் அபிஷேகம், நைவேத்யம், பூஜை எல்லாம் ஒழுங்காக நடக்க வேண்டும்.