
* ஆஞ்சநேயரை சொல்லின் சொல்வர் என்று போற்றுவது ஏன்?
டி.இந்திராணி, சாத்தூர்
அசோக வனத்தில் சீதையைக் கண்ட ஆஞ்சநேயர், 'கண்டேன் சீதையை' என்று ராமருக்கு பதிலளித்தார். சீதை உயிரோடும் கற்போடும் இருப்பதை ராமருக்கு தாமதம் இல்லாமல் தெரிவிக்க வேண்டும் என்பதே அனுமனின் நோக்கம். எனவே 'கண்டேன் கற்பினுக்கு அணியை கண்களால்' என்ற வார்த்தையை முதலில் சொல்லி விட்டு, பிறகு கற்புடன் இருப்பதையும், யார் சொன்னதையோ கேட்காமல், தன் கண்களால் பார்த்ததை யும் உறுதிப்படுத்தினார். இதனால், அனுமனுக்கு 'சொல்லின் செல்வர்' என்ற சிறப்பு பெயர் உண்டானது.
** செய்வினை தோஷம் இருப்பதை எப்படித் தெரிந்து கொள்வது. அதைப் போக்கும் வழி என்ன?
சி.கே.பர்வதவர்த்தினி, கோவை
அவரவர் செய்த பாவத்தால் வரும் துன்பமே செய்வினை தோஷம். 'இயற்கையாக வரும் குடும்ப கஷ்டங்களையும் செய்வினை தோஷம் என குழப்பிக் கொள்ளக் கூடாது. இதைச் செய்யுமளவு உள்ள மந்திரவாதிகள் இப்போது இல்லை. சம்பந்தர் தேவாரத்திலுள்ள 'திருநீலகண்டப் பதிகம்' படித்தால் செய்வினை தோஷம் பற்றி பயப்படத் தேவையில்லை. இதில் செய்வினை நம்மைத் தீண்டப் பெறா திருநீலகண்டம்' என்ற குறிப்பு உள்ளது.
* அமாவாசை விரத நாட்களில் பசுவிற்கு அகத்திக்கீரை கொடுப்பது ஏன்?
பா.இளவரசி, நெல்லிக்குப்பம்
எல்லா நாட்களிலுமே பசுவுக்கு பசுந்தழை, கீரை, பழம் கொடுக்கலாம். பசுவின் உடலில் எல்லா தேவர்களும் வசிக்கின்றனர். அமாவாசையன்று கொடுத்தால் அவர்கள் மகிழ்ந்து, மறைந்த நம் முன்னோர்கள் ஆத்மசாந்தி அடைய வழி வகுப்பர். இதனால் மகிழும் நம் முன்னோர் நம்மை ஆசி அளிப்பர். நம் வம்சம் வாழையடி வாழையாக பெருகும். செல்வச் செழிப்புடன் நோய் நொடிஇன்றி வாழ வழி கிடைக்கும்.
* பெரியவர்களிடம் தம்பதிகளாக ஆசி பெறும் போது மனைவி கணவரின் எந்தப்பக்கம் நிற்க வேண்டும்?
எஸ்.துரைராஜ், விழுப்புரம்
கடவுளை வழிபடும் போதும், பெரியவர்களிடம் ஆசி பெறும்போதும் கணவரின் வலப்புறமே மனைவி நிற்க வேண்டும். இது எல்லா சுபவிஷயத்திற்கும் பொருந்தும்.
* பிறந்த 30ம் நாளில் தான் குழந்தைக்கு பெயர் சூட்ட வேண்டுமா?
ஆர்.மகாலட்சுமி.சிவகங்கை
சாஸ்திரப்படி 11ம் நாள் சூட்ட வேண்டும். சிலர் 16ம் நாளிலோ, 30ம் நாளிலோ சூட்டுகின்றனர். இது அவரவர் குடும்ப வழக்கத்தை பொறுத்தது.

