
* ஈர ஆடையுடன் இறைவனை வழிபடலாமா?
அ.அன்னப்பன், காஞ்சிபுரம்
கூடாது. தூய்மையான உலர்ந்த ஆடையை அணிந்தே கோவிலுக்குச் செல்ல வேண்டும். தீர்த்த தலமான ராமேஸ்வரத்தில் கோவில் பிரகாரத்திலுள்ள 22 தீர்த்தங்களில் நீராடியதும் அப்படியே ஈர உடையுடன் சுவாமி, அம்மன் கருவறைக்கு பக்தர்கள் செல்கின்றனர். இதை தவிர்க்க வேண்டும்.
* பிறந்த குழந்தைக்கு காப்பு கட்டுவது கட்டாயமா...
கே.ஆர்.பத்மா, சென்னை
தீய சக்திகளிடம் இருந்து குழந்தையைக் காக்க காப்பு கட்டுவது அவசியம். இதற்கு 'ரட்சை' என்று பெயர். இடுப்பு, மணிக்கட்டில் கருப்பு, சிவப்பு கயிறுகளைக் கட்டுவர். ராமரின் பிள்ளைகான லவன், குசருக்கு வால்மீகி மகரிஷி ரட்சை கட்டியதாக ராமாயணம் கூறுகிறது.
** மனதைக் குரங்கு என குறை கூறுகிறார்களே.... சரிதானா?
எம்.ஜெயலட்சுமி, விழுப்புரம்
மனம் ஒரு குரங்கு என்பது உண்மையே. மரம் விட்டு மரம் தாவும் குரங்கு போல, மனமும் சதா ஆசை வயப்பட்டு இங்கும் அங்கும் தாவிக் குதிக்கிறது. ஆனால், அந்த குரங்கு ராம பக்தியில் ஆழ்ந்து ஆஞ்சநேயராக உருவெடுக்கும் போது, கடலைத் தாவும் பலம் கொண்டதாகி விடுகிறது. மனதை ஒருமுகப்படுத்தி செயல்பட்டால் எதையும் சாதிக்கும் வலிமை உண்டாகி விடும்.
* பிரம்ம முகூர்த்தத்தில் வழிபாடு, தியானம் இரண்டில் எதில் ஈடுபடுவது சிறந்தது?
அ.சக்திவேல், தேவகோட்டை
பிரம்ம முகூர்த்தமான காலை 4.30- 6.00 மணிக்குள் விளக்கேற்றி வழிபாடு செய்வது, தியானத்தில் இருப்பது இரண்டுமே சிறப்பானது. கண்ணில் இரண்டுமே பார்வைக்கு துணைபுரிவது போல, வழிபாடு, தியானம் இரண்டும் கடவுளின் அருளுக்கு துணைபுரிபவையே. உங்கள் விருப்பம் போல எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம்.
* சக்கரத்தாழ்வார் வழிபாடு பற்றி கூறுங்கள்.
எஸ்.ராஜேந்திரன், சிதம்பரம்
திருமாலின் கையில் இருக்கும் சக்ராயுதத்தை 'சக்கரத்தாழ்வார்' என வழிபடுகிறோம். இவரை சனிக்கிழமை அல்லது சித்திரை நட்சத்திரத்தில் வழிபடுவது சிறப்பு. இவருக்கு 'சுதர்சனம்' என்றும் பெயருண்டு. சுதர்சனம் என்பதற்கு 'உயர்ந்த தரிசனம்' என்று பொருள். இவரைத் தரிசித்தாலே நன்மை உண்டாகும் என்பது ஐதீகம். துளசி மாலை அணிவித்தும், கல்கண்டு படைத்தும் 12 முறை வலம் வந்து வழிபடுவோருக்கு எண்ணியது விரைவில் நிறைவேறும்.
* தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று பாடுகிறார்களே..... இதற்கு என்ன பொருள்?
ஆர்.கலைவாணி, பள்ளிக்கரணை
சிவன் எல்லாருக்கும், எல்லா நாட்டுக்கும் பொதுவானவரே. ஆனால், தென்னாட்டிற்கு மனிதப் பிறப்பெடுத்து வந்தார். தென்னாடு என்றால், பாண்டிய நாட்டைக் குறிக்கும். இதன் தலைநகர் மதுரையில் சிவன் பிட்டுக்கு மண் சுமந்தார். விறகு விற்றார். 64 திருவிளையாடல்களை நிகழ்த்தினார். அது மட்டுமல்ல! மீனாட்சியைக் கைப்பிடித்து இவ்வூர் மருமகன் ஆனார். அந்த அடிப்படையில் மாணிக்கவாசகர் 'தென்னாடுடைய சிவனே' என்று போற்றுகிறார்.

