ADDED : ஏப் 24, 2021 01:41 PM
* சிவன் நடனமாடிய தலங்களில் மதுரையும் ஒன்று. வெள்ளி சபை இங்குள்ளது.
* மதுரையில் அருள்புரியும் சிவபெருமானுக்கு சுந்தரேஸ்வரர், சொக்கநாதர், சோமசுந்தரர், சொக்கலிங்கம், கூடலிங்கம், ஆலவாய் அண்ணல் எனும் பல பெயர்கள் உள்ளன.
* மேருமலை, வெள்ளிமலை, கேதார்நாத், காசி போன்ற தலங்களில் உள்ள சிவலிங்கங்களுக்கு எல்லாம் முன்பாகத் தோன்றிய லிங்கம் மதுரை சொக்கலிங்கம். இதனால் மூலலிங்கம் எனப்படுகிறது.
* மீனாட்சி அம்மனின் சிலை மரகதக் கல்லால் உருவானது.
* தடாதகை, அங்கயற்கண்ணி, கோமளவல்லி, பாண்டிய ராஜகுமாரி, மாணிக்கவல்லி, சுந்தரவல்லி, மரகதவல்லி, மரகதமயில், கூடற்கலாப மயில் என மீனாட்சிக்கு பல பெயர்கள் உண்டு.
* மதுரையில் சிவன் நிகழ்த்திய திருவிளையாடல்கள் 64. சுவாமி சன்னதி உள்பிராகாரத்தில் திருவிளையாடல்கள் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன.
* நவக்கிரங்களில் புதனுக்குரிய பரிகாரத் தலம் மதுரை. இங்கு வழிபட்டால் புதன்திசை, புதன் புத்தி நடப்பவர்களுக்கு யோகம் உண்டாகும்.
* மீனாட்சியம்மன் கோயிலை தாமரை பொகுட்டாக கற்பனை செய்தால் கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களை தாமரை மலரின் இதழ்களாகச் சொல்லலாம். சங்க இலக்கியமான பரிபாடலில் இக்கற்பனை இடம் பெற்றுள்ளது.
* மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள வீதிகள் தமிழ் மாதப் பெயர்களாக அழைக்கப்படுகின்றன.
முதல் சுற்று வீதி - ஆடி வீதி, 2ம் சுற்று வீதி - சித்திரை வீதி, 3ம்சுற்று வீதி - ஆவணிமூல வீதி, 4ம் சுற்று வீதிகள் - மாசி வீதி, 5ம் சுற்று வீதிகள் - வெளி வீதிகள் அல்லது தைவீதிகள்
* முதலில் மீனாட்சியம்மனை வழிபட்ட பிறகே சொக்கநாதரை வழிபடும் மரபு மதுரையில் பின்பற்றப்படுகிறது.
* மீன் தன் முட்டைகளை பார்வையாலேயே பாதுகாப்பது போல மதுரையை ஆட்சி செய்யும் அம்பிகை தன் பக்தர்களை பார்வையால் பாதுகாப்பதால் 'மீனாட்சி', 'அங்கயற்கண்ணி' எனப்படுகிறாள்.
