திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்த திருத்தலங்களில் ஒன்று விக்கிரமசிங்கபுரம். இங்கு முன்னொரு காலத்தில் ஆனந்தகூத்தர், மயிலம்மை என்னும் தம்பதியினர் வாழ்ந்தனர். இவர்கள் தெய்வ பக்தியில் சிறந்தவர்கள்.
தினந்தோறும் இவர்களது வீட்டிற்கு வரும் அடியார்களை இன்முகத்துடன் வரவேற்று உணவு கொடுப்பதை தொண்டாக செய்து வந்தனர். அகத்தியர் அருளால் இவர்களுக்கு குழந்தை பிறந்தது. ஒரு நாள் மதியம் இவர்களது வீடு நோக்கி சில துறவிகள் வந்து தர்மம் கேட்டனர். அவர்களை வரவேற்று உணவளித்தாள் மயிலம்மையார். இச்செயலை பார்த்துக் கொண்டிருந்த இரண்டு வயது குழந்தை (சிவஞான முனிவர்) அத்தொண்டினை பாராட்டி கீழ்கண்ட பாடலை மடை திறந்த வெள்ளம் போல் பாடியது. இக்குழந்தையே பிற்காலத்தில் தலைசிறந்த ஞானாசிரியராகவும் முனிவராகவும், நுாலாசிரியராகவும், மொழி பெயர்ப்பாளராகவும், குருநாதராகவும் திகழ்ந்தது. தாயை போற்றுங்கள் இவ்வுலகம் கொண்டாடுமாறு வாழலாம் என்பதற்கு ஞானக்குழந்தையாகிய சிவஞான முனிவர் ஒரு எடுத்துக்காட்டு.
அருந்ததி என்அம்மை அடியவர்கட்கு என்றும்
திருந்த அமுதளிக்கும் செல்வி - பொருந்தவே
ஆனந்தக்கூத்தர் அகமகிழத்தொண்டு செய்யும்
மானந் தவாத மயில்.