கிருஷ்ணருக்கு மனைவியர்கள் கணக்கில் அடங்காது என்பர். எத்தனையோ ஆயிரம் மனைவிகள். பட்டமகிஷிகள் எட்டுப் பேர். நரகாசுர வதம் முடிந்தபின் அவனால் சிறையில் அடைக்கப் பட்டிருந்த 16 ஆயிரம் பெண்களும் கிருஷ்ணரை மணந்தனர். நாரதருக்கு இதில் பெரும் சந்தேகம் உண்டானது. கிருஷ்ணர் எப்படி இத்தனை பெண்களைச் சமாளிக்கிறார். அவருடைய மாயாசக்தி என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்று துவாரகைக்கு கிளம்பினார். கிருஷ்ண பத்தினிகளின் அழகிய மாளிகைகளைக் கண்டு பிரமித்தவராக ருக்மணி இருக்கும் அரண்மனைக்குள் நுழைந்தார். அங்கு ருக்மணி கிருஷ்ணருக்கு பணிவிடை செய்து கொண்டிருந்தாள்.
நாரதரைக் கண்டவுடன் ருக்மணி ''வாருங்கள்! நாரதரே! உமது வரவு நல்வரவாகட்டும்'' என வரவேற்றாள்.
“நாரதா! நான் உனக்காக என்ன செய்ய வேண்டும்? எனக் கேட்டார் கிருஷ்ணர்.
''இதென்ன கேள்வி! தங்கள் திருப்பாதங்களைச் சரணடைந்தவருக்கு வேறென்ன வேண்டும்'' என்றார்.
''நாரதா! உன் மனம் போலவே ஆகட்டும்'' என ஆசியளித்தார்.
நாரதர் தன் சந்தேகத்தை கிருஷ்ணரிடம் கேட்காமல் மற்றொரு மாளிகைக்கு சென்றார். அங்கு கிருஷ்ணர் உத்தவர் என்பவருடன் சொக்கட்டான் ஆடிக் கொண்டிருந்தார்.
நாரதரைக் கண்ட கிருஷ்ணர், ''நாரதா! நலம் தானே...''என குசலம் விசாரித்தார்.
''உம் அருளால் பரம சவுக்கியம்'' என்று பதிலளித்து விட்டு புறப்பட்டார்.
இன்னொரு வீட்டில் பகவான் கிருஷ்ணர், குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தார். வேறொரு வீட்டில் அவர் புராண சொற்பொழிவைக் கேட்டு ஆடிப்பாடிக் கொண்டிருந்தார். அடுத்த வீட்டில் ஹோமாக்னி செய்து கொண்டும், ஒரு வீட்டில் நீராடிக் கொண்டும், ஒரு வீட்டில் அந்தணர்களுக்கு உணவு பரிமாறிக் கொண்டும் இருப்பதைக் கண்ட நாரதர் ஆச்சரியப்பட்டார்.
இவ்வாறு வீடுகள்தோறும் கிருஷ்ணரைக் கண்ட நாரதர், “கிருஷ்ணா! உன் மாயா சக்தியை நேரில் அறிந்து கொண்டேன்.
எங்கும் கிருஷ்ணமயமாக இருப்பதைக் கண்டேன்,” என்றார்.