
சொத்து வழக்கு ஜவ்வாக இழுத்ததால் நிலக்கிழார் ஒருவர், மஹாபெரியவரை தரிசிக்க காஞ்சிபுரம் வந்தார். மஹாபெரியவரிடம் ஆசி பெற்ற பின், தன் பக்கம் நியாயம் இருப்பதைச் சொல்லி வருந்தினார்.
'உங்க ஊர் கோயிலில் தேர் இழுத்ததுண்டா?' எனக் கேட்டார் மஹாபெரியவர்.
'இல்லையே சுவாமி' என்றார் நிலக்கிழார். அசைந்தாடி வரும் தேரை ரசிக்கிறார்களே தவிர வடத்தை யாரும் இழுப்பதில்லை. தேரை இழுப்பதால் என்ன நன்மை என்பதை காஞ்சி மஹாபெரியவர்,'இனியாவது தேர் வடத்தை இழுங்கள். கட்டாயம் அன்னதானம் செய்யுங்கள். பின்னர் வழக்கு தொடர்பான வேலையில் ஈடுபடுங்கள். எல்லாம் நல்லபடியாக முடியும்' என்றார். பிரசாதம் பெற்றுக் கொண்டு ஊருக்கு புறப்பட்டார் நிலக்கிழார்.
மூன்று மாதம் கழித்து காஞ்சிபுரத்திற்கு மீண்டும் வந்தார். 'பெரியவா... தீர்ப்பு எனக்கு சாதகமாக வந்தது. 'தர்மம் தலை காக்கும்' என புரிந்து கொண்டேன்' என்றார் கண்ணீருடன்.
'தேர் இழுத்தாயா?' எனக் கேட்டார் மஹாபெரியவர்.
'ஆமாம் சுவாமி. அதன் பிறகே எல்லாம் நல்லபடியாக நடந்தது' என்றார்.
''தேர் என்பது நடமாடும் கோயில். கோயிலுக்குச் செல்ல முடியாத முதியவர்கள், நோயாளிகள், மாற்றுத் திறனாளிகள் கூட திருவிழாவில் வீட்டின் வாசலில் இருந்தபடி கடவுளைத் தரிசிக்கலாம். அப்போது தெய்வீக சக்தி ஊரெங்கும் வெளிப்படும்.
தேர் வலம் வரும் நேரத்தில் தீயசக்திகள் ஓடி விடும். தேர் வடத்தை இழுப்பதற்கும் அன்னதானம், தண்ணீர் பந்தல் வைப்பதற்கும் முற்பிறவியில் புண்ணியம் செய்திருக்க வேண்டும். கர்மவினை துரத்தியதால் தான் வழக்கு ஜவ்வாக இழுத்ததோடு, சொத்து கைநழுவிப் போக இருந்தது. தேர் இழுத்ததாலும், அன்னதானம் செய்த புண்ணியத்தாலும் சொத்து மீண்டும் கிடைத்தது.
குருவருளும், திருவருளும் உங்களைத் தேடி வரும்.
காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்
* குலதெய்வத்தை ஆண்டுக்கு இரண்டு முறையாவது தரிசனம் செய்.
* குலதெய்வம் கோயிலில் விளக்கேற்று; உன் கஷ்டம் தீரும்.
* முதல் முடிக்காணிக்கையை குலதெய்வத்திற்கு கொடு.
* உன் முன்னோரை காப்பாற்றிய குலதெய்வம் உன்னையும் காக்கும்.
உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்
அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!
-நாராயணீயம்
எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.
பி.சுவாமிநாதன்
swami1964@gmail.com