ADDED : ஜன 28, 2026 01:48 PM

ஒழுக்கத்தைக் கடைப்பிடி
மனிதராகப் பிறந்த அனைவரும் வாழ்வில் சில ஒழுங்கு முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் வாழ்க்கையே சிதைந்து விடும். கடல் கூட கரையைத் தாண்டுவதில்லை. கடல் தன் இயற்கைக் கட்டுப்பாட்டை மீறினால் மனிதன் உள்ளிட்ட எந்த உயிர்களும் வாழ முடியாது.
மகாகவி இதையே 'ரீதி தவறேல்' என்கிறார். 'ரீதி' என்பது ஒழுங்கு முறை. தனி மனிதரின் ஒழுக்கம், நாட்டின் ஒழுக்கமாகிறது. வாழ்க்கை முறை ஒழுக்கத்தை பாப்பா பாட்டு மூலமாக தெரிவிக்கிறார்.
காலை எழுந்தவுடன் படிப்பு - பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு - என்று
வழக்கப் படுத்திக் கொள்ளு பாப்பா
பொய் சொல்லக் கூடாது பாப்பா - என்றும்
புறஞ்சொல்ல லாகாது பாப்பா
தெய்வம் நமக்குத்துணை பாப்பா - ஒரு
தீங்குவர மாட்டாது பாப்பா.
வேதமுடையதிந்த நாடு - நல்ல
வீரர் பிறந்த திந்த நாடு
சேதமில் லாத ஹிந்து ஸ்தானம் - இதைத்
தெய்வமென்று கும்பிடடி பாப்பா.
ஒழுக்கம் என்பது சிறுவயது முதல் ஒருவரின் மனதிற்குள் ஊட்டப்பட வேண்டும். To be cultivated என்பார்கள். ஒழுக்கம் தான் பழக்கமாக மாறுகிறது. Habit never dies என்பார் என் தந்தை. இந்த habit என்ற சொல்லில் இருக்கும் H ஐ எடுத்தால் A BIT இருக்கும். HAவை எடுத்தால், BIT இருக்கும். B யையும் எடுத்தால் IT இருக்கும். அதாவது It always remains என்பார். உண்மை தானே?
தன்னுடைய தேசிய கீதத்தில் ஒழுக்கம் இல்லாத செயல்கள் தேவையில்லை என்றும் அதை, போகின்ற பாரதம் என்று
வலிமையற்ற தோளினாய் போ போ போ
மார்பிலே ஒடுங்கினாய் போ போ போ
பொலிவிலா முகத்தினாய் போ போ போ
பொறி யிழந்த விழியினாய் போ போ போ
எனப் பாடுகிறார். அதேநேரம், நெறி மிகுந்த பாரதத்தை,
ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா
உறுதிகொண்ட நெஞ்சினாய் வா வா வா
களிபடைத்த மொழியினாய் வா வா வா
கடுமை கொண்ட தோளினாய் வா வா வா
தெளிவு பெற்ற மதியினாய் வா வா வா
சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா
மெய்மை கொண்ட நுாலையே அன்போடு
வேதமென்று போற்றுவாய் வா வா வா
என்றே பாடுகிறார்.
மனித சமுதாய வளர்ச்சியின் அனுபவத்தில் படிப்படியாக பல ஒழுங்கு முறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன. 'ரீதி தவறேல்' என்பது வாழ்வில் சரியான பாதையை, நியாயமான முறையை, ஒழுங்குமுறையைத் தேர்ந்தெடுத்து, அதை மனநிறைவுடன் பின்பற்றுவதைக் குறிக்கும்.
ஒவ்வொரு மனிதனுக்கும் உள் பயம் (மனசாட்சி), தெய்வ பயம் இருக்க வேண்டும். இதை தவிர குருபக்தி (ஆசிரியர்), நீதி
நுால்களை மதிக்கும் பண்பாடும்
வேண்டும். இது இருந்தால்
மாணவர்களிடம் போதை மருந்துகள்,
உருட்டுக் கட்டைகள், கத்தி போன்றவை
எப்படி வரும்?
ஆங்கிலத்தில் 26 எழுத்துக்களை வைத்து,
பயிற்சி வகுப்புகளில் நான் சொல்லும்
விஷயம் நினைவிற்கு வருகிறது.
ஒருவரின் வெற்றிக்கு நான்கு
அடிப்படைக் காரணிகள் உண்டு
- அவை, கல்வி, கடின உழைப்பு,
அதிர்ஷ்டம், ஒழுங்குமுறை.
A என்பதற்கு மதிப்பு 1, B = 2,
C = 3 , Z = 26 என்ற வகையில்
கணக்கிட்டுப் பார்த்தால்,
GOODLUCK 88
KNOWLEDGE 96
HARDWORK 98
DISCIPLINE 100
என்றே வரும். அதிர்ஷ்டம் 88, அறிவு (படிப்பு) 96, உழைப்பு 98 என்று வர, ஒழுக்கம் மட்டுமே 100 என வருகிறது. இது கூறுவது என்னவென்றால், 100 விழுக்காடு ஒழுக்கமே நிறைவான வாழ்க்கை என்பதே ஒழுக்கத்தின் மேன்மையை உணர்த்துகிறது.
வான்புகழ் வள்ளுவன் ஒழுக்கம் என்பதற்கு தனி அதிகாரத்தை ஒதுக்கியுள்ளார்.
ஒழுக்க முடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.
பொருள்: ஒழுக்கம் உடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பு. ஒழுக்கம் தவறுபவர்கள் இழிந்த குடியில் பிறந்தவராக கருதப்படுவர்.
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.
பொருள்: உயர்வு தரக் கூடியது ஒழுக்கம் என்பதால் அது உயிரை விட மேலானது. நாட்டிற்காக உழைப்பதையும், தேசப்பற்றையும் ஒழுக்கமாகக் கூறும் பாரதியார், கற்பு என்பது பெண்ணுக்கு மட்டுமல்ல, ஆணுக்கும் அவசியம் வேண்டும் என்கிறார். பாரதியார் கூறும் ஒழுக்கம் என்பது சமூக ஏற்றத்தாழ்வுகளை நீக்கி, மனித நேயம், சமத்துவம், விடுதலையை நிலைநாட்டும் பரந்த அறமாகும்.
திறமை கொண்ட தீமையற்ற
தொழில் புரிந்து யாவரும்
தேர்ந்த கல்வி ஞானம் எய்தி
வாழ்வம் இந்த நாட்டிலே
என சிறப்பான கல்வி மூலம் ஞானம் பெறுவதே ஒழுக்கமான வாழ்வு என்கிறார்.
அன்றாட வாழ்வில் செயல்பாடுகளில் ஒழுக்கம் குறைந்து விட்டது. வீடுகளில் தேவையான பொருட்கள் மட்டும் வாங்குவது, வாங்கிய பொருட்களை சரியாக உபயோகிப்பது என்பதில் ஒழுக்கம் இல்லை. அதிகமாக வாங்கி வீணாக்குவது என்ற எண்ணம் எங்கும் இருக்கிறது. தொலைக்காட்சி பார்ப்பது, அலைபேசி உபயோகிப்பது, சாப்பிடுவது என அனைத்திலும் சுயக்கட்டுப்பாடு இருக்க வேண்டும்.
பணத்தை, பர்ஸை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்தில் வைக்கிறோம். இப்படி அலட்சியத்துடன் செயல்படக் கூடாது. பணத்திற்கு (மகாலட்சுமிக்கு) கொடுக்கும் மதிப்பை பொறுத்தே வாழ்வு அமையும் என்பதே பெரிய மனிதர்களின் வளர்ச்சி அல்லது வீழ்ச்சி நமக்குச் சொல்லும் பாடம். பணத்தை, நகை போன்ற பொருட்களை அதற்குரிய இடத்தில்தான் வைக்கவேண்டும். இவை எல்லாம் மகாலட்சுமியின் அம்சம். பணத்தை மதிப்புடன் கையாண்டால் தான் அது நிறையச் சேரும். இல்லாவிட்டால் ஒருவனை விட்டுச் செல்லும்.
அதே போல், வீடு வைத்திருக்கும் நேர்த்தி (aesthetics) என்பது மிகக் குறைவு. பணம் சம்பாதிப்பதாலும், வேலைக்குப் போவதாலும், இது பற்றிய சிந்தனை யாருக்கும் இல்லை. அதை வலியுறுத்த பெரியவர்களும் தயாராக இல்லை அல்லது அவர்களால் சொல்ல முடியவில்லை. இந்த நேர்த்தி என்பது அழகைக் கொடுப்பதுடன், அநாவசிய செலவைக் குறைக்கும். வீடும் சுத்தமாக இருக்கும்.
கூழானாலும் குளித்துக் குடி, கந்தை ஆனாலும் கசக்கிக் கட்டு என்கிறார் அவ்வையார். சுத்தம் சோறு போடும் எனச் சொன்னால், பகுத்தறிவுடன் கேட்பதாக, சாம்பார் யார் ஊற்றுவர் எனக் கேட்டால், சிரிப்பு வரலாம். ஒழுக்கம் வராது. ஒழுங்கீனம்தான் வரும்.
அன்னியப் படை எடுப்புக்கு முன்பு, இங்கே குருகுலங்கள் இருந்தன. இதில் அரச குடும்பம் முதல் சாமானியன் வரை அனைவரும் சமம். வேறுபாடு இல்லாமல், கல்வி, வாழ்க்கை நெறிமுறைகள், அறம் சார்ந்த கருத்துக்கள் போதிக்கபட்டன. தெய்வ பயமும், குரு பக்தியும், பணிவும், மாணவர்களுக்கு நல்ல ஒழுக்கத்தைக் கற்றுத் தந்தன.
ஆன்மிகம் தவிர, அரசியலிலும் துாய்மை நிறைந்த தலைவர்கள் - திலகர், ராஜாஜி, சத்தியமூர்த்தி, மொராஜி தேசாய், ஆச்சார்ய கிருபாளானி, பசும்பொன் தேவர், காமராஜர் என வாழ்ந்த காலம் உண்டு. இன்றும் நம் பாரதப்பிரதமரின் செயல்பாடுகள் பிரமிக்க வைக்கின்றன என்றால் அதன் அடிப்படை ஒழுக்க நெறியும் தேச பக்தியும்.
குழந்தைகளிடம் பேசுவதில், கொஞ்சுவதில் கூட, வெளிப்படும் வார்த்தைகளில் ஒழுக்கம் வேண்டும். அதே போல, பெரியவர்களிடம் பேசும் போது கவனம் வேண்டும். அதனால்தான் மனதில் உறுதி வேண்டும் எனக் கேட்கும் பாரதியார், வாக்கினிலே இனிமை வேண்டும் என்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசியல்வாதிகள் தனிமனித, பொது வாழ்வில் ஒழுக்கம் நிறைந்தவராக இருக்க வேண்டும். பணம், பதவி இவற்றுக்கு அப்பாற்பட்டது ஒழுக்கம். படித்தவர்கள் ஈடுபடும் ஜனநாயக விரோத செயல்கள், ஊழல், பேச வேண்டிய நேரத்தில் பேசாமல் இருப்பது இவை எல்லாம் சமுதாயத்தைச் சீரழிக்கும் ஒழுங்கீனங்கள்.
அணியும் உடை, பேசும் வார்த்தைகள், முக பாவங்கள், உடல் மொழி, தீய பழக்கம் இல்லாமை, தேசபக்தி, தெய்வ நம்பிக்கை என எல்லாம் உண்மையான ஒழுக்கத்தின் வெளிப்பாடுகளே. எனவே தான் மகாகவி பாரதியார் ஒழுக்கத்தைக் கடைப்பிடி (ரீதி தவறேல்) என புதிய ஆத்திசூடியில் கூறுகிறார்.
-ஆத்திசூடி தொடரும்
முனைவர் தென்காசி கணேசன்
94447 94010

